ஆயுதங்களை கீழே போடும் வரை புலிகளுடன் பேச்சு கிடையாது: ராஜபக்சே
ஐ.நா. 63வது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்துள்ள ராஜபக்சே அங்கு உரை நிகழ்த்துகையில், விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோதமான ஆயுதம் தரித்த தீவிரவாத குழுவாகும். அது தனது வன்முறையைக் கைவிட வேண்டும். ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். எனவே அவர்களுடன் பேச்சு நடத்த முடியாது.
பலமுறை அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. இலங்கையின் சிறுபான்மை தமிழ் சமுதாயத்திற்குத் தேவையானவற்றை அரசியல் ரீதியாகவும், அரசியல் சட்ட ரீதியாகவும் நிறைவேற்ற அரசு உறுதியுடன் உள்ளது.
ஆனால் ஆயுதம் தாங்கிய தீவிரவாத குழுவான விடுதலைப் புலிகளுடன் அரசு எந்தவித தொடர்பையும் வைத்துக் கொள்ள முடியாது. அவர்கள் ஒரு சமுதாயத்தின் பிரதிநிதிகள் அல்ல, அந்த சமுதாயத்தின் ஒரு துண்டுதான் அவர்கள்.
இலங்கையின் வட பகுதியில் அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சொந்த இனத்தவரின் ஜனநாயக உரிமைகளை நசுக்கி வருகிறார்கள். சுதந்திரமான முறையில் தேர்தல் நடத்த தடையாக இருக்கிறார்கள்.
சிங்கள மக்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே நட்புறவு நிலவுவதை அவர்கள் விரும்பவில்லை. பேச்சுவார்த்தைளை கேலிக்கூத்தாக்க நினைக்கிறார்கள்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வு காண நார்வே தூதுக் குழு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச குழுக்களின் உதவியுடன் இலங்கையில் இதுவரை இருந்த அரசுகள் முயற்சித்தும் அவற்றை விடுதலைப் புலிகள் மதிக்காமல் அவமதித்து விட்டனர்.
பேச்சுவார்த்தையின் ஒவ்வொரு முறையும் அவர்கள் அதை சரிவர பயன்படுத்திக் கொள்ளாமல், ஆயுதங்களைக் குவிப்பதற்கும், தீவிரவாதத்தை பலப்படுத்திக் கொள்ளவுமே பயன்படுத்தி வந்துள்ளனர் என்றார் ராஜபக்சே.