நியூயார்க்கில் மன்மோகன் சிங் - சர்தாரி சந்திப்பு

இந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து பிரதமர், சர்தாரியிடம் விவாதித்ததாக தெரிகிறது. அதேபோல காஷ்மீர் பிரச்சனை குறித்து சர்தாரி பேசியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்கு சில மணி நேரத்திற்கு முன்பு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் சர்தாரி பேசுகையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும்போது காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசுவேன்.
இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியப் பிரச்சினையாக காஷ்மீர் இருக்கிறது. காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து தார்மீக ஆதரவு அளிக்கும்.
வெறும் நம்பிக்கைகள், பரஸ்பர வாழ்த்துக்களை மட்டும் வைத்துக் கொண்டு தீவிரவாதத்தை நம்மால் ஒழிக்க முடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாம் சண்டையில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று கூறியிருந்தார்.
சர்தாரியுடனான சந்திப்பு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.
வராத மெக்கெய்ன் - வந்த பாலின்
இதற்கிடையே, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரதமர் - குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கெய்ன் சந்திப்பு நடைபெறவில்லை. மாறாக, துணை அதிபர் வேட்பாளரான சாரா பாலினை, பிரதமரை சந்திக்க மெக்கெய்ன் அனுப்பி வைத்திருந்தார்.
அமெரிக்க நிதிச் சந்தை நெருக்கடி தொடர்பான விவாதங்கள் உள்ளிட்டவற்றில் மிகவும் பிசியாக இருந்ததால் மெக்கெய்னால் வர முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.
அவருக்குப் பதில் சாரா பாலின் பிரதமரை சந்தித்தார். மெக்கெய்தான் இந்த சந்திப்புக்கு விருப்பம் தெரிவித்திருந்தார். இருப்பினும் கடைசி நேரத்தில் அவரால் வர இயலவில்லை.
அமெரிக்க உள்ளூர் அரசியலில் இதுவரை அறியப்பட்டவரான பாலினை, குடியரசுக் கட்சி உலக அரசியலிலும் பரிச்சயப்படுத்த முயலுகிறது. அதன் ஒரு கட்டமாக அவரை பல்வேறு உலகத் தலைவர்களுடன் சந்திக்க வைத்து வருகிறது.
அதன் முயற்சியாகவே பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் அதிபர் சர்தாரி ஆகியோரை பாலின் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications