சென்னை-இரண்டரை வயது சிறுவன் கொடூர கொலை
சென்னை சௌகார்பேட்டையைச் சேர்ந்த தம்பதி ஆனந்த் (34) - ஷைலா(24). இவர்களுக்கு இரண்டரை வயதில் மோனிக் என்ற மகன் இருந்தான். ராஜஸ்தானைச் சேர்ந்த ஆனந்த், கொருக்குப்பேட்டையில் ஸ்டீல்பட்டறை வைத்துள்ளார்.
ஆனந்தின் உறவினர் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜூக்னு (35). ஏழுகிணறு பகுதியில் வசித்து வந்தார். வேலைக்கு செல்லாமல் ஆனந்திடம் அடிக்கடி பணம் வாங்கி செல்வார். இந்தநிலையில் நேற்று மாலை ஆனந்த் வீட்டிற்கு வந்த ஜூக்னு, ஷைலாவிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார்.
ஆனந்த் மதுரைக்கு வியாபார விஷயமாக சென்று விட்டதாகவும், தற்போது பணம் இல்லை என்றும் ஷைலா கூறியிருக்கிறார். இதையடுத்து வழக்கம்போல குழந்தை மோனிக்கை தூக்கி கொண்டு கடைக்கு செல்வதாக கூறி சென்றார்.
இரவாகியும் ஜூக்னு வராததால் போன் செய்து உடனே வரும்படி ஷைலா கூறியுள்ளார். அப்போதும் அவர்கள் வரவில்லை. இதற்கிடையே தனது உறவினர் சாந்தா என்ற பெண்ணுக்கு போன் செய்த ஜூக்னு, பணம் தராததால் குழந்தையை கடத்தி செல்வதாக கூறியுள்ளார். இதை ஷைலாவிடம் சாந்தா கூறினார்.
இதனால் பதறிப்போன ஷைலா தனது தந்தையுடன் சென்று யானைகவுனி போலீஸில் புகார் செய்தார். உதவி கமிஷனர் பாலச்சந்திரன், இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீஸார் குழந்தையையும் ஜூக்னுவையும் தேட ஆரம்பித்தனர்.
இரவு 9 மணிக்கு மீண்டும் சாந்தாவுக்கு போன் செய்து குழந்தையை கொலை செய்யப்போவதாக ஜூக்னு கூறியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டனர்.
இந்நிலையில் சுமார் 10 மணிக்கு மீண்டும் சாந்தாவுக்கு போன் செய்த ஜூக்னு குழந்தையை கொலை செய்து விட்டதாகவும், அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே பிணத்தை போட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.
தகவலறிந்த போலீஸார் அம்பத்தூர் ரயில் நிலையத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அங்கு குழந்தை கிடைக்கவில்லை. நள்ளிரவுக்கு பிறகு திருமுல்லைவாயல் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் குழந்தை மோனிக்கின் பிணத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.
குழந்தையின் தலை முழுவதுமாக நசுங்கியிருந்தது. குழந்தையை தண்டவாளத்தில் மோதி கொலை செய்திருக்கக் கூடும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். உடலை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
தகவல் அறிந்த ஆனந்த் இன்று காலை மதுரையிலிருந்து சென்னைக்கு திரும்பினார். மோனிக்கின் உடலை பார்த்து பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர்.
குழந்தையை கொடூரமாக கொலை செய்த ஜூக்னுவை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீஸார் ஜூக்னுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.