தேர்தல் வன்முறை: சிபிஎம் நூதன போராட்டம்
மதுரை: மதுரை மாநகராட்சி 52-வது வார்டு இடைத் தேர்தலில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் கறுப்பு பட்டை அணிந்து நூதன போராட்டம் நடத்தினர்.
மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது.
அப்போது, மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கறுப்பு பட்டை அணிந்து வந்திருப்பதைக் கண்ட மேயர் தேன்மொழி, எதற்காக கறுப்புபட்டை அணிந்து வந்துள்ளீர்கள் என கேட்டார்.
அதற்கு சிபிஎம் கவுன்சிலர்கள், மதுரை மாநகராட்சி 52 -வது வார்டு இடைத் தேர்தலில் நடை பெற்ற வன்முறையை கண்டித்தும், மன்றத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், தண்ணீர் வினியோகத்தை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்தும் கறுப்பு பட்டை அணிந்து வந்திருப்பதாக கூறினார்.
இதனால் திமுக கவுன்சிலர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன்றத்தில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது.
அப்போது மார்க்சிஸ்ட் கவுன்சிலர்களை கறுப்பு பட்டையை கழற்ற மேயர் உத்தரவிட்டார். அதை அவர்கள் மறுத்து வெளிநடப்பு செய்தனர்.