தப்பியோடிய கைதி மீண்டும் கைது
கரூர்: கரூர் கிளை சிறையில் இருந்து தப்பியோடிய கைதியை அவரது வீட்டுக்கு அருகிலேயே போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில் கரூர் கிளை சிறை உள்ளது. கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த அண்ணாத்துரை என்பவர் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையில் சமையல் வேலை செய்ய அண்ணாத்துரையை சிறைக்காவலர் ராஜன்பாபு அழைத்துச் சென்றார். அப்போது அவரை தள்ளிவிட்டு சுவர் ஏறி குதித்து தப்பித்தார் அண்ணாத்துரை.
இதுகுறித்து கரூர் கிளை அதிகாரி போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அண்ணாத்துரையை தேடி வந்தனர். அண்ணாத்துரை தனது வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். அண்ணாத்துரையை அவரது வீட்டுக்கு அருகில் சுற்றி வளைத்து பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications