இன்று முதல் திருச்செந்தூர்-நெல்லை ரயில்
நெல்லை: திருச்செந்தூர்-நெல்லை இடையிலான அகல ரயில் பாதையில் இன்று போக்குவரத்து தொடங்குகிறது. மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு தொடங்கி வைக்கிறார்.
கடந்த 2006ம் ஆண்டு நெல்லை-திருச்செந்தூர் இடையே இயக்கப்பட்ட மீட்டர் கேஜ் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதன் பிறகு ரூ.70 கோடியில் அகல பாதை பணிகள் ஒன்றரை வருடங்களாக நடந்தன.
இந்த பணிகள் முடிந்து கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி 120 கிமீ வேகத்தில் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சிஜேஎஸ் நாயுடு தலைமையில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதையடுத்து 70 கிமீ வேகத்தில் ரயில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்த ரயில் சேவை இன்று துவங்குகிறது. திருச்செந்தூரில் நடைபெரும் துவக்க விழாவில் ரயில்வே இணை அமைச்சர் வேலு கொடியசைத்து பயணிகள் ரயிலை துவக்கி வைக்கிறார்.
மத்திய அமைச்சர் ராதிகா செல்வி தலைமை வகிக்கிறார். அமைச்சர் டிபிஎம் மைதீன்கான், எம்பி தனஷ்கோடி ஆதித்தன், எம்எல்ஏக்கள் அனிதா, ஆர்.ராதாகிருஷ்ணன், மாலை ராஜா, ராணி வெங்கடேஷன், திருச்செந்தூர் பேரூராட்சி தலைவர் மகேந்திரன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.