திருப்பூர் பனியன் நிறுவன அதிபர்-மகன் கொலை
திருப்பூர்: நொய்டாவில் கார் நிறுவன தலைமை செயலதிகாரியை வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் படுகொலை செய்ததைப் போல, திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சிலர் அந்த நிறுவனத்தின் அதிபரையும், அவரது மகனையும் படுகொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருவரையும் கொன்று பிணங்களை காரில் கடத்த முயன்றபோது, கார், விபத்துக்குள்ளானதால் பிணங்களோடு காரை நடுரோட்டில் விட்டுவிட்டு கொலை கும்பல் தப்பியுள்ளது.
திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே உள்ள மின் கம்பத்தில் கார் ஒன்று மோதிய நிலையில் இருந்தது. இதை இன்று அதிகாலை 3.30 மணியளவில் சிலர் பார்த்தனர்.
கார் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கும் என்று கருதிய அப்பகுதியினர். காரில் சிக்கி இருப்பவர்களை மீட்க காருக்கு அருகே சென்றனர். கார் கண்ணாடி வழியே எட்டிப்பார்த்தபோது பின்னால் உள்ள இருக்கையில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையில் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
விபத்தில் கார் பெரிய அளவில் சேதமடையாத நிலையில் காருக்குள் படுகாயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதை பார்த்த மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த போலீஸார் காரில் இருந்த முதியவரின் பிணத்தை மீட்டனர். பின்னர் காரை சோதனை செய்தனர்.
கார் டிக்கியை திறந்த போலீஸார் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். டிக்கியின் உள்ளே ரத்தம் வழிந்த நிலையில் சாக்குமூட்டை ஒன்று இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் இருந்தது. தலையை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து 2 உடல்களையும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் காருக்குள் பிணமாக கிடந்தவர்கள் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு ஓம்சக்தி கோவில் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் சாகுல்லா அவருடைய மகன் ராகுல் சாகுல்லா என்பது தெரிய வந்தது.
இவர்கள் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர்கள். திருப்பூரில் குடியேறிய இவர்கள் வீட்டின் கீழ் தளத்திலும், லட்சுமி நகரிலும் பனியன் கம்பெனி நடத்தி வந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு சுரேஷ் சாகுல்லாவின் மனைவி கான்பூருக்கு சென்றுவிட்டார். சுரேஷூம், ராகுலும் மட்டும் வீட்டில் இருந்தனர். நேற்று பனியன் கம்பெனிகளில் வேலை முடிந்ததும் இருவரும் வீடு திரும்பினர்.
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் தூங்கிக் கொண்டிருந்த தந்தையையும் மகனையும் இரும்புக் கம்பியால் தலையில் பயங்கரமாக தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
அவர்களின் வீட்டில் சோதனை செய்தபோது படுக்கை அறை முழுவதும் ரத்த சகதியாக இருந்தது. கொலைக் கும்பல் சுரேஷ் சாகுல்லாவின் உடலை இழுத்து வந்து வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரின் பின் இருக்கையில் ஏற்றியுள்ளனர். ராகுலின் உடலை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி தூக்கி வந்து டிக்கியில் வைத்திருக்கிறார்கள்.
பின்னர் உடல்களை யாருக்கும் தெரியாமல் வீசுவதற்காக காரை எங்கோ ஓட்டிச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் விபத்துக்குள்ளாகி உள்ளது. காரை சரிசெய்ய தாமதமானால் மாட்டிக் கொள்வோம் என்று அந்த கும்பல் தப்பியுள்ளது.
சாகுல்லாவின் நிறுவனத்தில் வேலை பார்த்து வேலையிலிருந்து நீக்கப்பட்ட சில தொழிலாளர்கள்தான் இந்தக் கொலையை செய்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலையாளிகளைப் பிடிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் நொய்டாவில், தனியார் கார் நிறுவன தலைமை செயலதிகாரியை வேலையை விட்டு நீக்கப்பட்ட தொழிலாளர்கள் கொடூரமாகக் கொலை செய்தனர். அதேபோன்ற சம்பவம் திருப்பூரில் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications