அம்பேத்கர் மணிமண்டபத்தில் மின்சாரம் தாக்கி மாணவி பலி
சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் நினைவு மணிமண்டபத்தில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்த 10வது வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ராஜா அண்ணாமலைபுரத்தில் தமிழக அரசின் அம்பேத்கர் மணிமண்டபம் உள்ளது. இங்கு அதே பகுதியைச் ேசர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் பவானி, அவரது சகோதரர்களுடன் நேற்று சுற்றிப் பார்க்க வந்திருந்தார்.
அப்போது அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை பவானி மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி அவர் சுருண்டு விழுந்தார். சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது நான்கு சகோதரர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. சத்தம் கேட்டு ஓடி வந்த காவலாளி, விரைந்து செயல்பட்டு மின் இணைப்பை துண்டித்தார். இதனால் அந்த நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில்தான் இந்த மணிமண்டபம் உள்ளது. முறையான பராமரிப்பில்லாமல் இருந்ததால்தான் மின்கம்பி அறுந்து கிடந்தது என்று கூறப்படுகிறது.