இந்தியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்ப உதவி - பிரான்ஸ் உறுதி!
பாரீஸ்: இந்தியாவுக்கு சிவில் அணுசக்திக்கான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவதாக பிரான்ஸ் உறுதியளித்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் பிரான்ஸ் அதிபரும், இந்தியப் பிரதமரும் நாளை பாரீஸில் கையெழுத்திடுகின்றனர்.
அணுசக்தி தொழில்நுட்பத்தில் உலகின் வலிமை மிக்க நாடுகளுள் முன்னணியில் இருப்பது பிரான்ஸ்தான். தனது மின்சாரத் தேவையில் 80 சதவிகிதத்தை அணுசக்தியின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்து கொள்ளும் அளவு ஆற்றல் படைத்தது பிரான்ஸ்.
தற்போது இந்த தொழில் நுட்பத்தை முழுமையாக இந்தியாவுக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் பிரான்ஸ் அதிபர் சர்கோஸி மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நாளை கையெழுத்திடுகின்றனர்.
இந்தியா-பிரான்ஸ் இடையிலான இந்த அணுசக்தி உடன்பாடு நம்பகமானது, நூறு சதவிகிதம் நடைமுறைக்கு சாத்தியமானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது இரு நாடுகளின் உறவுகளும் என பிரான்ஸ் பிரதமர் சர்கோஸி நேற்று தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் கடந்த ஜனவரி மாதமே கையெழுத்தாக வேண்டியது. ஆனால் என்எஸ்ஜியின் உறுப்பு நாடுகள் பல இந்தியாவுக்கு வழங்கப்பட்ட சில அணுசக்தி சலுகைகளை எதிர்த்ததால் தாமதமாகிவிட்டது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்னரே இன்று மாலை இரு தலைவர்களும் மார்சில்லாவில் நடைபெறும் இந்திய-ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் சந்தித்துப் பேச உள்ளனர்.












Click it and Unblock the Notifications