'என்கேகேபி ராஜா'- திமுகவினரிடம் சிபிசிஐடி விசாரணை
ஈரோடு: முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதான ஆள்கடத்தல் மற்றும் சொத்து பறிப்பு வழக்கு தொடர்பாக தாராபுரம் திமுக நகர செயலாளர் தனசேகரன் உள்பட கட்சி நிர்வாகிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த பழனிச்சாமி, அவரது மனைவி மலர்விழி, மகன் சிவபாலன், தம்பி குகமணி ஆகியோரை முன்னாள் கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவின் தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் கடத்தி சென்றதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ராஜாவின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து பழனிச்சாமியின் தந்தை சின்னசாமியின் மரணத்துக்கு காரணமாக இருந்ததாக முன்னாள் அமைச்சர் ராஜா உள்பட அவரது ஆதரவாளர்கள் சுமார் 20 பேர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சிபிசிஐடி எஸ்பி அருண் தலைமையிலான தனிப்படை கடந்த 21 ம் தேதி முதல் பெருந்துறையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் முன்னாள் அமைச்சர் ராஜாவின் ஆட்கள், அவர்களை கடத்தி சித்திரவதை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பெருந்துறை நகர திமுக செயலாளர் கோபிநாத், ஈரோடு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பவானி ரெங்கசாமி, ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, மற்றும் பெருந்துறையை சேர்ந்த பாலாஜி ஆகிய 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், தாராபுரம் திமுக நகர செயலாளர் தனசேகரன், ஈரோடு மாவட்ட பிரதிநிதி குறிஞ்சி, நகர பிரதிநிதி யுவராஜ் உள்பட பல முக்கிய நிர்வாகிகளிடம் சிபிசிஐடி பேலீசார் நேற்று 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.