ஈழ தமிழர்கள்-கருணாநிதிக்கு ராமதாஸ் எச்சரிக்கை
சென்னை: இலங்கையி்ல் நடக்கும் மனித உரிமை மீறல்களை ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் கூட கண்டித்துள்ளார். ஆனால் கருணாநிதி கண்டிக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொலை செய்யப்படுவதை கண்டித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தின் முன்பு பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ராமதாஸ் பேசியதாவது:
இலங்கையில் ராஜபக்சே அரசு தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. இதனை கண்டித்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் கருணாநிதி குரல் கொடுக்க முன் வர வேண்டும். இந்த விஷயத்தில் கருணாநிதி தனது மௌனத்தை கலைக்க வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தாய் தமிழகத்தில் பலர் போராடுவது அவர்களுக்கு ஆறுதலைத் தரலாம். ஆனால் தனி தமிழ் ஈழத்தை அங்கீகரிப்பதே இன்றைய தேவை.
தமிழ் ஈழம் மலர மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் கருணாநிதி தீர்மானம் கொண்டு வர வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் உங்கள் ஆட்சிதான் நடக்கிறது. அதனால் 356வது பிரிவின் கீழ் ஆட்சி பறிபோகும் என்ற அச்சம் உங்களுக்கு வேண்டாம். அப்படியே ஈழத் தமிழர் பிரச்சனைக்காக ஆட்சியை இழந்தாலும், நாங்கள் மீண்டும் கருணாநிதியை முதல்வராக்குவோம்.
ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி இப்போதே குரல் கொடுக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழர்களும் அழிந்த பிறகு கவிதை எழுதி எந்த பலனும் இல்லை. திமுக அரசை குறை கூற வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை.திமுகவை தவிர வேறு ஆட்சியாக இருந்தால் இதைவிட தீவிரமாக போராடி இருப்போம். ஈழத் தமிழர்களுக்கு கருணாநிதியின் வாய்ச்சொல்தான் அருமருந்து.
எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம்:
ஈழத் தமிழர் பிரச்சனையில் 10 நாட்களுக்குள் கருணாநிதி தனது மௌனத்தை கலைக்காவிட்டால் தீவுத்திடலில் ஆயிரம் கருஞ்சட்டை தொண்டர்களை திரட்டி தீப்பந்தம் ஏந்தி போராடுவோம்.
அப்போதும் அவரது மௌனம் கலையாவிட்டால், பாமக எம்எல்ஏக்கள் சட்டசபை வளாகத்தில் ஒரு மூலையில் தொடர் உண்ணாவிரதம் இருக்க தயங்க மாட்டார்கள். அவர்களை கைது செய்தால், எம்பிக்கள், பாமக இளைஞரணி, மாணவர் அணி, மகளிர் அணியினர் தொடர் உண்ணாவிரதம் இருப்பார்கள்.
காங்கிரஸ், பாஜக, திமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சி எம்பிக்களின் குழுவை வவுனியாவுக்கு முதல்வர் கருணாநிதி அனுப்ப வேண்டும். ஈழத் தமிழர்களை கொலை செய்ய இலங்கை அரசுக்கு பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகள் கப்பல்களில் ஆயுதங்களை அனுப்பி உதவி வருகின்றன.
இலங்கையில் உள்ள துறைமுகங்களை நவீனப்படுத்த சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உதவி செய்து வருகின்றன. இதனால் தூத்துக்குடி, கொச்சி துறைமுகங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இலங்கையி்ல் நடக்கும் மனித உரிமை மீறல்களை ஐநா சபையின் செயலாளர் கூட கண்டித்துள்ளார். ஆனால் கருணாநிதி கண்டிக்கவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications