700 பில்லியன் கடன்-மறுபரிசீலனை செய்ய புஷ் கோரிக்கை

சீட்டுக் கட்டு மாளிகை போல சரிந்து விழுந்து கொண்டிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தை நிலை நிறுத்த தற்போது கடுமையான போராட்டங்களில் இறங்கியுள்ளது அமெரிக்க அரசு. முதல் கட்டமாக, கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் வங்கிகளைச் சீரமைக்கும் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.
அமெரிக்க தொழில்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கு பெரும் கடன் அளிப்பு ஆதாரங்களாகத் திகழந்த லேஹ்மன் பிரதர்ஸ், மெர்ரில் லின்ஜ், வாஷிங்டன் மியூச்சுவல், வாக்கோவியா போன்றவை நிதி நெருக்கடியைத் தாளமுடியாமல் திவால், கைமாறல் என விழுந்துவிட்டன.
மேலும் சில வங்கிகள் மூடுவிழாவுக்கு நேரம் பார்த்துக் கொண்டுள்ளன. இந்நிலையில் இவற்றைக் காப்பாற்ற அமெரிக்க அரசு 700 பில்லியன் டாலர் கடன் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்துக்கான ஒப்புதலைப் பெற அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் கடன் உதவித் திட்ட முன் வரைவு வைக்கப்பட்டது.
தனியார் நிதி நிறுவனங்கள் பொறுப்பற்ற முறையில் வழங்கிய கடன்களுக்கு மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து, நேர்மையாக வரி செலுத்திய பணத்தைச் செலவிடுவதா என சபை உறுப்பினர்கள் கடும் ஆட்சேபணை எழுப்பி, அந்த முன் வரைவை தோற்கடித்தனர். புஷ்ஷின் கட்சிக்காரர்களே இதனை எதிர்த்து வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் அமெரிக்கா மட்டுமின்றி உலகப் பொருளாதாரமும் ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி தொடர்கிறது.
இந்த நிலைமையைக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் புஷ், எப்படியாவது மீண்டும் கடனுதவி இந்த திட்டத்துக்கு அனுமதி கொடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்க காங்கிரஸ் மற்றும் அதிகாரிகளி்டம் இதுகுறித்து தொடர்ந்து புஷ் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், எப்படியாவது அனுமதியைப் பெற்று திட்டத்தை நிறைவேற்ற புஷ் உறுதி பூண்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களைச் சமாதானப்படுத்தும் வகையில் இந்த திட்ட வரைவில் சில மாறுதல் செய்யவும் புஷ் ஒப்புக் கொண்டுள்ளாராம்.












Click it and Unblock the Notifications