பிற ஐரோப்பிய நாடுகளுடனும் அணு சக்தி ஒப்பந்தம்: பிரதமர்
பாரீஸ்: பிரான்ஸைப் போலவே பிற ஐரோப்பிய நாடுகள் அனைத்துடனும் இந்தியா அணு சக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸுடனான அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் நடந்த இந்தியா - ஐரோப்பிய யூனியன் வர்த்தக கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். ஐரோப்பிய நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், தலைமை செயலதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், இன்று அணு சக்தித் துறையில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இரு தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிரான்ஸுடன் இன்று செய்து கொண்ட ஒப்பந்தத்தைப் போலவே மற்ற ஐரோப்பிய நாடுகளுடனும் இதேபோன்ற ஒப்பந்தங்களை செய்வோம்.
சிவில் அணு சக்தி வர்த்தகப் பிரிவில் வெளிநாட்டு ஒத்துழைப்புக்கு இந்தியா தயாராகியுள்ளது. அதற்கான கதவுகளைத் திறந்துள்ளது என்றார்.
நாடு திரும்பினார்:
இந் நிலையில் அமெரிக்க மற்றும் பிரான்ஸ் நாடுகளில் 10 நாள் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் இன்று டெல்லி திரும்பினார்.
கடந்த 22ம் தேதி அவர் அமெரிக்கா புறப்பட்டார். 26ம் தேதி ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி உள்பட உலக நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேசினார்.
அணு ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் புஷ்ஷை சந்தித்து பேசினார்.
பின்னர் பிரான்ஸ் சென்ற பிரதமர் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியை சந்தித்து பேசினார். இந்தியா-பிரான்ஸ் அணு சக்தி ஒப்பந்ததிலும் நேற்று கையெழுத்திட்டார்.