மகாத்மா பிறந்த நாள்: களை கட்டிய சேந்தாரம்பாளையம் காந்தி கோவில்!
இன்று மகாத்மா காந்தியின் 140வது பிறந்த நாள். நாடு முழுவதும் தேசப் பிதாவின் பிறந்த நாள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில், செந்தாம்பாளையத்தில் உள்ள மகாத்மா காந்தியின் கோவிலிலும் மக்கள் தேச பக்தியுடன் வழிபட்டனர். சிறப்பு பூஜைள், வழிபாடுகள் என கோவில் விழாக் கோலம் பூண்டிருந்தது.
காந்தி பிறந்த நாள் என்றில்லாமல், சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவற்றின்போதும் இங்கு மக்கள் கூடி வழிபாடு செய்வது வழக்கம்.
ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை மாவட்டங்களில் இருந்து பெரும் திரளான மக்கள் இன்று செந்தாம்பாளையம் காந்தி கோவிலில் கூடி வழிபாடு செய்தனர்.
காவிரி ஆற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட நீரைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் செய்யப்பட்டன. கோவிலில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு பால், தயிர், தேன், இளநீர், தானிய அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
அம்மன் கோவில்களில் செய்யப்படுவது போலவே காந்தி கோவிலிலும் வழிபாடுகள் செய்யப்பட்டன.
இக்கோவிலின் முதன்மை தெய்வமாக மகாத்மா இருக்கிறார். காந்தி தவிர சிவன், சனீஸ்வரன் ஆகியோரது சிலைகளும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கும் இன்று சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன
இக்கோவிலை சேந்தாரம்பாளையம் கிராம மக்கள் கடந்த 1997ம் ஆண்டு கட்டினர். அன்று முதல் கடந்த 11 ஆண்டுகளாக இங்கு தொடர்ந்து வழிபாடு நடந்து வருகிறது.
காந்தி கோவிலுக்கு முன்பு, மகாத்மாவின் துணைவியார் கஸ்தூரிபா காந்திக்கும் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலின் பொறுப்பாளராக வையாபுரி என்பவர் உள்ளார். அவர் கூறுகையில், காந்தி கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். கோவிலுக்கு வந்து செல்லும் பாதையை செப்பனிட்டு நல்ல சாலையாக அமைத்துத் தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
இந்த கிராமத்தை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அப்போதுதான் ஏராளமான மக்கள் கோவிலுக்கு வர முடியும் என்றார் வையாபுரி.