ஓட்டுக்காக பெண்களைக் கூட்டி மாநாடு நடத்துவதா? ராமதாஸுக்கு பொன்முடி கண்டனம்
விழுப்புரம்: ஓட்டுக்காக பெண்களை கூட்டி மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக ராமதாஸ் மீது குற்றம்சாட்டியுள்ளார் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரத்தில் திமுக சார்பில் அண்ணா நூற்றாண்டு விழா, மற்றும் அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. செஞ்சி ஒன்றிய செயலாளர் ரங்கநாதன் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி பேசியதாவது
பெரியாரின் கனவை நிறைவேற்றுவதில் கருணாநிதிக்கு நிகர் அவரேதான். பெண்கள் அரசியல் விழிப்புணர்ச்சி பெற வேண்டும் என்று பெரியாரும், அண்ணாவும் விரும்பினார்கள். அவர்களின் விருப்பம் நனவாகிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் 2011ல் தன்னுடைய தலைமையில் ஆட்சி அமைக்கப்போவதாக நூறு பேருக்கு மேல் சொல்லிவிட்டனர். அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் எம்ஜிஆர் என்று நினைத்துக் கொள்கின்றனர்.
இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 6 பொறியியல் கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதில் பின்தங்கிய மாவட்டமாக உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் 3 கல்லூரிகள் வழங்க்பட்டுள்ளது. விழுப்புரம், திண்டிவனம், பண்ருட்டி என நம்பகுதிக்கு வழங்கி, அடித்தட்டு மக்களும் உயர்கல்வி பெற பாடுபடுபவர் கருணாநிதி.
மதுவிலக்கிற்காக தன் வீட்டிலிருந்த தென்னை மரங்களையே வெட்டி சாய்த்தவர் பெரியார். இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் பெண்களை கூட்டி மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார். இது ஓட்டுக்காக நடத்தப்படும் மாநாடு.
காந்தி ஜெயந்தி முதல் பொது இடத்தில் சிகெரட் பிடித்தால் ரூ.200 அபராதம் என்று சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அன்று யாரும் குடிக்க கூடாது, மீறுவோருக்கு ரூ.500 அபராதம் என்று சட்டம் போட வேண்டியதுதானே? சட்டத்தின் மூலம் யாரையும் திருத்த முடியாது. பக்கத்து மாநிலங்களான புதுவை, கேரளா ஆகிய மாநிலங்களில் மது விலக்கை அமுல்படுத்த சொல்ல வேண்டியதுதானே?
சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்றனர். இப்போது என்ன நடக்கிறது. பாமகவை பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும் என்றார்.