கோவில் விவகாரம்: காக்கிவாடன்பாட்டியில் தொடரும் உண்ணாவிரதம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காக்கிவாடன் பட்டியில், கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக 6 சமுதாயத்தை சேர்ந்த மக்கள் இன்று 3வது நாளாக தொடரந்து உண்ணாவிரத்தை மேற்கொண்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகில் உள்ளது காக்கிவாடன்பட்டி. இங்கு காளியம்மன் மற்றும் கண்ணன் கோவில்கள் உள்ளன.
இந்த கோயில்களில் வழிபாடு நடத்துவது தொடர்பாக 6 சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கும், ஒரு சமூகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. கோயிலின் உரிமை குறித்த பிரச்சனையால் கோயில் பூட்டப்பட்டது.
இந்த கோயில்களில் வழிபாடு நடத்த உரிமை கோரி 6 சமுதாய மக்கள் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு அருகே உள்ள காமாட்சியம்மன் கோவிலில் கடந்த 25ம் தேதி முதல் குடியேறி அங்கேயே தங்கி உள்ளனர்.
இரு தரப்பு மக்களிடம் சமாதான பேச்சுவார்தையை அரசு அதிகாரிகள் நடத்தினர். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில், பூட்டிய கோயிலை திறந்த தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்த காத்திருந்தார். ஆனால் மக்கள் யாரும் வராதாதல் திரும்பிவிட்டார்.
இந்த பிரச்சனையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் இரு தரப்பையும் அழைத்துப் பேச வேண்டும் என்று போராட்டகாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்கப்படாததால் 6 சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் இன்று மூன்றாவது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications