மெரீனா கடற்கரையில் குளித்த 4 பேர் நீரில் மூழ்கி பலி
சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் குளித்த 4 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி பலியாயினர். அவர்களின் உடல்களை ஹெலிகாப்டர் மூலம் தேடி வருகின்றனர்.
கடலூரைச் சேர்ந்த சகோதரர்கள் பிரபாகரன் (23), பிரேம் குமார் (16), ஹூண்டாய் கம்பெனியில் பணியாற்றினர். இவரது நண்பர்கள் துரைபாக்கம் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த ராஜசேகர் (26), சந்தோஷ்குமார் (22), வினோத்குமார் (21), விக்னேஷ்வரன் (20).
நேற்று விடுமுறை என்பதால் இவர்கள் அனைவரும் மெரீனா கடற்கரைக்கு சென்றனர். விக்னேஷ்வரனை தவிர மற்ற 5 பேரும் கடலில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வந்த பெரிய அலையில் அவர்கள் சிக்கினர். இதை பார்த்த கடற்கரையில் இருந்தவர்கள் அவரை மீட்கு முயன்றனர். இதில் வினோத் குமார், பிரேம்குமாரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.
ராஜசேகர், சந்தோஷ் குமார், பிரபாகரன் ஆகியோர் நீரில் மூழ்கி பலியாயினர் அவர்களின் உடல் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீஸில் புகார் செய்தார் வினோத்குமார்.
அதேபோல வடபழனியைச் சேர்ந்த சதீஷ் குமார் (18) தனது நண்பர்கள் 9 பேருடன் மெரீனாவில் குளித்துக் கொண்டிருந்தபோது அலையில் சிக்கி பலியானார்.
போலீஸார் மீனவர்களின் உதவியுடன் 4 பேரின் உடல்களை கடலில் தேடினர். இதுவரை உடல்கள் கிடைக்காததால், கடற்படை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி நடந்து வருகிறது.