இலங்கை: மத்திய அரசை கருணாநிதி வலியுறுத்த நல்லகண்ணு கோரிக்கை
மதுரை: ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இந்த தீர்மானத்தை நிறைவேற்ற மத்திய அரசை திமுக வலியுறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் நல்லகண்ணு கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் நடந்த சிபிஜ உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்த நல்லகண்ணு நிகழ்ச்சியில் பேசுகையில், இலங்கையில் பல ஆண்டுகளாக தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதனால் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட இலங்கை அரசு அடையாள அட்டை வழங்கும்போது 13,000 தமிழர்களை சந்தேகத்திற்குரியவர்களாக அறிவித்துள்ளது. இந்த நிலையில்தான் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்துக்கும் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை.
இலங்கை அரசு தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை அரசுக்கு ராணுவ ரீதியான உதவிகளை செய்யக் கூடாது. ஆனால், இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இன்னும் அந்த தீர்மானத்தை செயல்படுத்தவில்லை. மத்திய அரசில் இடம் பெற்றுள்ள திமுக, இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு ஆயுதங்கள் மூலம் தீர்வு காணமுடியாது. அரசியல் ரீதியான பேச்சு வார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்றார்