வழக்கறிஞர் மீது தாக்குதல் - ரூ.1 லட்சம் வழங்க அரசுக்கு உத்தரவு
மதுரை: வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை தாசில்தார் நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் முகைதீன் அப்துல் காதர். மீனாட்சி பஜாரில் கடை வைத்துள்ள ராஜாமணிக்கும், அப்துல் சமது என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. இதனால் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. இதில் அப்துல் சமதுவின் வழக்கை முகைதீன் அப்துல் காதர் பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ராஜாமணி, முகைதீனை தாக்கியுள்ளார். இதுகுறித்து அப்துல் சமதுவும், வழக்கறிஞர் முகைதீனும் திலகர்திடல் போலீஸில் புகார் செய்தனர்.
அப்போது காவல் நிலையத்தில் வைத்தே அவர்களை திமுகவை சேர்ந்த சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கறிஞர் முகைதீன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், எங்களை காவல் நிலையத்தில் வைத்தே திமுகவை சேர்ந்த சிலர் தாக்கினர். இதை போலீசார் வேடிக்கை பார்த்தனர். மேலும் மனுவை வாங்கவும் மறுத்து விட்டனர்.
எனவே இது குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், தனக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு, வழக்கறிஞர் முகைதீன் அப்துல் காதருக்கு அரசு ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications