டெல்லியில் கான்டலீசா ரைஸ் - ஒப்பந்தம் கையெழுத்தாகாது?
டெல்லி: அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகுமா, இல்லையா என்ற பரபரப்பான எதிர்பார்ப்புக்கு மத்தியில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் இன்று டெல்லி வந்தார்.
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து விட்டது. இருப்பினும் இந்த ஒப்பந்தத்தில், தடையற்ற எரிபொருள் சப்ளை குறித்து அமெரிக்க தரப்பில் உத்தரவாதம் எதுவும் இடம் பெறாதது இந்தியாவை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவிடம் பேசி தெளிவுபடுத்திய பின்னர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு நிர்வாக ரீதியிலான பல விஷயங்கள் பேசி தீர்க்கப்பட வேண்டியுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கான்டலீசா ரைஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா கிளம்புவதற்கு முன்பு வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அணு ஆயுத சோதனை தொடர்பாக ஹைட் சட்டத்தில் உள்ள அம்சங்களை அமெரிக்கா பின்பற்றும். அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக பல நிர்வாக ரீதியிலான விஷயங்கள் பேசப்பட வேண்டியுள்ளது.
2 நாட்களுக்கு முன்புதான் ஒப்பந்தம் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் கையெழுத்திட அதிபர் புஷ் ஆர்வத்துடன் உள்ளார். விரைவில் அது நடைபெறும்.
இந்த ஒப்பந்தம் நனவாக பாடுபட்ட இந்திய - அமெரிக்க சமூகத்தினர், அமெரிக்க - இந்திய வர்த்தக சமூகத்தினர், தூதர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரையும் புஷ் நிர்வாகம் பாராட்டுகிறது.
இரு தரப்பு உறவுகளையும் மேலும் வலுப்படுத்திக் கொள்ள இந்த ஒப்பந்தம் மூலம் என்னென்ன செய்ய முடியும் என்பது குறித்து புஷ் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
இந்தியாவுடன் மிகப் பெரிய உறவு அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளது. எனவே இந்த உறவின் மூலம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் அதை விரிவுபடுத்திக் கொள்ள தேவைப்படும் நடவடிக்கைகளை நாங்கள் விரிவாக ஆலோசித்து வருகிறோம். நிர்வாக ரீதியிலான பல முக்கிய அம்சங்கள் இன்னும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியுள்ளது என்றார்.
ஆனால் தடையற்ற எரிபொருள் சப்ளை குறித்து ரைஸ் எதுவும் குறிப்பிடவில்லை. அதிகாரப்பூர்வமான உத்தரவாதத்தை அமெரிக்கா தராததால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட அவசரம் காட்ட வேண்டாம் என இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்தப் பின்னணியில் இன்று ரைஸ் டெல்லி வந்து சேர்ந்தார். 2 நாள் பயணமாக அவர் டெல்லி வந்துள்ளார். சிறப்பு விமானம் மூலம் காலையில் டெல்லி வந்து சேர்ந்த ரைஸுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரைஸ் டெல்லி வந்துள்ளபோதிலும், அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உள்ளிட்டோரை ரைஸ் சந்திக்கவுள்ளார்.
பிரதமருடனான ரைஸ் சந்திப்பின்போது தடையற்ற எரிபொருள் சப்ளை குறித்து பிரதமர் விவாதிப்பார் எனத் தெரிகிறது.