முதல்வர்களை திண்டாட வைக்கும் கருணாநிதியின் திட்டங்கள்: ஸ்டாலின்
சென்னை: மானிய விலையில் அரிசி, மளிகை பொருள் போன்ற திட்டங்களை முதல்வர் கருணாநிதி செயல்படுத்துவதை பார்த்து மற்ற மாநில முதல்வர்கள் திண்டாடுகின்றனர் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
ரூ.50 மானிய விலையில் மளிகை பொருட்கள் திட்டத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:
மானிய விலையில் மளிகை பொருட்கள் வழங்குவது மிகவும் அற்புதமான திட்டம். திமுக தேர்தல் அறிக்கையில் எத்தனையோ வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளன. முதல்வர் கருணாநிதியின் இதுபோன்ற அறிவிப்புகளால் மற்ற மாநில முதல்வர்கள் திண்டாடுகின்றனர்.
கிலோ அரிசி ரூ.2க்கு தருவோம் என்று நாங்கள் கூறியபோது, சாத்தியமா என்று கேள்வி எழுப்பினர் எதிர்கட்சியினர். ரூ.2க்கு அல்ல, ஒரு ரூபாய்க்கே வழங்குகிறோம் என்று அண்ணா நூற்றாண்டு விழாவில் செய்து காட்டினார் முதல்வர்.
உடனே, ரூபாய்க்கு கிலோ அரிசி திட்டம் குறித்து, அரிசி வழங்கினால் போதுமா, அதை வைத்து சமையல் செய்ய முடியுமா, சாம்பார் வைக்க முடியுமா என்று ஜெயலலிதா கேட்டார். இப்போது, அரசின் ரூ.50க்கு மளிகை பொருள் திட்டத்தில் சாம்பார் மட்டுமல்ல ருசியான குழம்பும் வைக்கலாம்.
இந்த மளிகை பொருட்களை வாங்க பெண்கள் ஆர்வமுடன் ரேஷன் கடைகளை நாடுகின்றனர். ஆனால் திட்டம் செயல்பட ஒரு வாரம் ஆகும் என்று கூறி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இந்த திட்டம் வரவேற்பு பெற்றுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications