நளினி விடுதலைக்காக புதிய இயக்கம் - வக்கீல்கள்
வேலூர்: நளினியின் விடுதலைக்காக, நல்லகண்ணு, தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் அடங்கிய ஆயுள் தண்டனை பெற்றோருக்கான மறு வாழ்வு இயக்கம் என்ற புதிய இயக்கத்தை தொடங்கவிருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னை விடுதலை செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருப்பினும் இதுகுறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசை அது கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் நளினியை அவரது வக்கீல்கள், எஸ். துரைசாமி, டி. இளங்கோ ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார்கள். ஒரு மணி நேரம் நடந்த சந்திப்புக்கு பின்னர் அவர்கள் சிறைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது, தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நகலை நளினியிடம் காட்டி அதன் விவரங்களை எடுத்து கூறினோம்.
நளினியின் விடுதலைக்காக "ஆயுள் தண்டனை பெற்றோருக்கான மறுவாழ்வு இயக்கம்' ஒன்றை துவங்க திட்டமிட்டிருக்கிறோம். இதற்கு அவருடைய அனுமதியை கேட்டோம். அவரும் அனுமதி கொடுத்திருக்கிறார்.
இந்த இயக்கம் இன்று முதல் செயல்படத் துவங்கும். மூத்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஆர்.நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் பிரமுகர் தமிழருவி மணியன், முன்னாள் சிபிஐ இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், தமிழறிஞர்கள் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற இருக்கிறார்கள்.
அவர்களை சந்தித்து பேசி, அவர்களின் ஒப்புதலை பெற்ற பிறகு இந்த இயக்கத்தின் குழு விரைவில் கூடி ஒரு அறிக்கை தயாரிக்கும். ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை தயாரித்து முதல்வர் கருணாநிதியிடம் கொடுக்க இருக்கிறோம்.
அரசியல் சட்டப்பிரிவு 161ன் கீழ் மாநில அரசுகளுக்கு ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் கூட்டியே விடுதலை செய்ய அதிகாரம் உள்ளது. 6 மாத சிறை தண்டனை பெற்றவர்கள் முதல், 20 வருட சிறை தண்டனை பெற்றவர்கள் வரை உள்ளவர்களை விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு இந்த சட்டப்பிரிவின் கீழ் அதிகாரம் உள்ளது. ஆகவே நளினியை விடுதலை செய்ய முடியாது என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி கூறுவது தவறானது.
மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே கூட 16 ஆண்டு சிறைவாசத்திற்கு பின்பு விடுதலை செய்யப்பட்டார். தற்போது நளினி 17 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். அவரை ஏன் விடுதலை செய்யக்கூடாது.
நீண்ட காலம் சிறையில் இருப்பதால் நளினியின் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாலும், விடுதலையாகி விடுவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.
பிரியங்கா தன்னை சந்தித்து பேசியதற்காக நளினி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால் அதற்கு பிரியங்காவிடமிருந்து பதில் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications