மக்களை சந்திக்க திமுகவுக்குப் பயமில்லை: அமைச்சர் ரகுபதி
திருக்குவளை: பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு தமிழகம் முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே எங்களுக்கு மக்களை சந்திக்க தயக்கமோ பயமோ இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ரகுபதி கூறினார்.
நாகை மாவட்டத்தில் மலிவு விலை மளிகைப் பொருட்கள் தொடக்க விழா திருக்குவளையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயராமன் தலைமை வகித்தார். திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் ரகுபதி பேசியதாவது
ஒரு ரூபாய் அரிசி திட்டத்தை எதிர்கட்சிகள் கேலி கிண்டல் செய்கின்றனர். இதனால் என்ன நன்மை என்று ஏழை எளிய மக்களுக்குத்தான் தெரியும். பணக்காரர்களுக்கு தெரியாது.
மக்களுடைய எதிர்காலத்தை எண்ணிப் பார்ப்பவர் தமிழக முதல்வர். அவரது சீரிய தலைமையில் தமிழகத்தில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு முன்னேற்றம் கண்டுள்ளது. இதனால் எங்களுக்கு மக்களை சந்திக்க எந்தவித தயக்கமும், பயமும் கிடையாது.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக முதன் முதலில் குரல் கொடுத்வர் கருணாநிதிதான். உலகத்தில் எங்கு தமிழர்களுக்கு பிரச்சனை என்றாலும் முதல் குரல் கொடுப்பவரும் அவர்தான்.
அணு சக்தி ஒப்பந்தம் நாட்டிற்கு தேவையான ஒன்று.
அணு சக்தி ஒப்பந்தம் மூலம் நாட்டில் தொழிற்சாலைகள் பெருகும் வாயப்பு உள்ளது. வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.
இந்த திட்டத்தை அப்துல்கலாமே வரவேற்றுள்ளார். ஆனால் எதிர்கட்சிகள் மக்களின் கவனத்தை திசை திருப்ப எதிர்க்கின்றனர் என்றார்.