தீம் பார்க்: சபாநாயகர், அமைச்சரை மக்கள் முற்றுகை
நெல்லை: நெல்லை அருகே தீம்பார்க் அமையவிருக்கும் இடத்தை பார்வையிடச் சென்ற சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர் மைதீன்கான் உள்ளிட்டோரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.
நெல்லையில் பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லாததால், இங்கு தீம்பார்க் அமைக்க மாநகராட்சி மேயர் சுப்பிரமணியன், அமைச்சர் மைதீன்கான் ஆகியோர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி, நெல்லையில் தீம் பார்க் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தீம் பார்க் அமையவுள்ள இலந்தைகுளத்தை அமைச்சர் மைதீன்கான், சபாநாயகர் ஆவுடையப்பன், எம்எல்ஏ அப்பாவு, துணை மேயர் முத்துராமலிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர்.
பார்க் அமையவுள்ள பகுதியையும், அதில் செய்யப்படும் வசதிகள் குறித்தும் சபாநாயகரிடம் மேயர் விளக்கினார். அப்போது இலந்தை குளத்தில் குடியிருக்கும் மக்கள் தீம்பார்க் அமைப்பதற்காக நாங்கள் காலி செய்ய மாட்டோம் என்று கூறி அவர்களை முற்றுகையிட்டனர்.
இலந்தை குளத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 20 குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் கூலி வேலை செய்து பிழைபபு நடத்தி வருகிறோம். இங்குள்ள குடியிருப்புகளை அகற்றிவிட்டு ஊருக்கு ஒதுக்கு புறத்தில் நிலம் ஒதுக்கினால் நாங்கள் பாதிக்கப்படுவோம். இந்த பகுதியிலேயே குடியிருக்க வீடுகட்டி தரவேண்டும் என்று கோரினர்.
இதையடுத்து மாற்று இடம் தர ஏற்பாடு செய்வதாக சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர் மைதீன்கான் ஆகியோர் உறுதி அளித்தனர்.