ஊட்டியில் மண் சரிவில் சிக்கி புதைந்த 3 தொழிலாளர்கள் மீட்பு
ஊட்டி: ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் வாகனங்களுக்கான பார்க்கிங் ஷெட் அமைக்க அஸ்திவாரம் தோண்டியபோது மண் சரிவு ஏற்பட்டது. இதில் புதைந்த 3 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
ஊட்டி நகராட்சி அலுவலகம் எதிரில் காலியாக உள்ள இடத்தில் வாகனங்களுக்கான பார்க்கிங் ஷெட் அமைக்கும் பணி கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. நேற்று காலை அஸ்திவாரம் தோண்டும் பணியில் 7 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென மண் சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் காந்தலை பகுதியைச் சேர்ந்த சிவா, தலையாட்டு மந்துவைச் சேர்ந்த அண்ணாதுரை, பாம்பேகேத்தில் பகுதியைச் சேர்ந்த பெண் தொழிலாளர் பாப்பு ஆகியோர் மண்ணில் புதைந்தனர். இதை பார்த்த மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர்.
உடனடியாக தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்த வந்த தீயணைப்பு படையினர் சுமார் அரை மணிநேரம் போராடி தொழிலாளர்களை உயிருடன் மீட்டனர். அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications