8 நிமிடங்களில் முடிந்த ரிசர்வேஷன்: பயணிகள் கடும் ஏமாற்றம்
சென்னை: தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய 8 நிமிடங்களில் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டதால் அதிகாலை முதலே நீண்ட வரிசைகளில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் ஏமாற்றமடைந்தனர்.
வருகிற 27ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும், கோவை போன்ற ஊர்களுக்கும் செல்லும் வெளியூர்ப் பயணிகள் 90 நாட்களுக்கு முன்பே ரயில்களில் முன்பதிவு செய்து விட்டனர்.
இதையடுத்து சென்னையிலிருந்து மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, திருநெல்வேலி, எர்ணாகுளம் உள்ளிட்ட ஊர்களுக்கு 10 சிறப்பு ரயில்களை அறிவித்தது. இவற்றுக்கான முன்பதிவு இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை 8 நிமிடங்களில் முன்பதிவு தொடங்கியது. வழக்கமான ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள், சிறப்பு ரயில்களிலாவது எடுக்கலாம் என்பதற்காக அதிகாலை முதலே சென்னையில் உள்ள எழும்பூர், மாம்பலம், தாம்பரம் உள்ளிட்ட ரயில்வே முன்பதிவு மையங்களில் காத்திருந்தனர்.
ஆனால் 8 மணிக்கு முன்பதிவு தொடங்கிய 8 நிமிடங்களிலேயே அனைத்து சீட்களும் நிரம்பி விட்டன. அதன் பின்னர் வந்தவர்களுக்கு காத்திருப்போர் பட்டியலில்தான் இடம் கிடைத்தது.
இதனால் நீண்ட நேரமாக காத்துக்கிடந்த பொதுமக்கள் பெரும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
ஆன்லைன் மூலம் டிராவல்ஸ் நிறுவனங்கள் மொத்தமாக டிக்கெட்களை புக் செய்து விடுவதே இதற்கு முக்கிய காரணம் என அவர்கள் குற்றம் சாட்டினர்.
இப்படி புக் செய்து விட்டு பின்னர் அதிக விலைக்கு டிக்கெட்களை பல டிராவல்ஸ் நிறுவனங்கள் விற்பதாகவம் அவர்கள் குமுறல் வெளியிட்டனர். இதற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் எத்தனை சிறப்பு ரயில்கள் விட்டாலும் வரிசையில் நின்று யாரும் டிக்கெட் எடுக்கவே முடியாது என்றும் அவர்கள் கோபத்துடன் கூறினர்.