திருப்பதி கருட சேவை - 7 லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருமலை: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று நடந்த கருட சேவையை 7 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் காயமடைந்தனர். இவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
திருப்பதி அருள்மிகு வெங்கடாசலபதி கோவிலில் கடந்த முதல் தேதி பிரம்மோற்சவம் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை நேற்று நடந்தது.
கருட சேவை தரிசனம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதாலும், உற்சவர் மலையப்ப ஸ்வாமி மகாவிஷ்ணு அவதாரத்தில் தோன்றி லட்சுமி, சகஸ்ர நாமாவளி மற்றும் மகரகண்டி ஹாரங்கள் அணிந்து வருவதை தரிசனம் செய்தால் பீடை விலகி, செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
பிரம்மோற்சவம் தொடங்கிய முதல் நாளில் இருந்தே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவியத் தொடங்கினர். முக்கியமான திருவிழாவான கருட சேவை நேற்று நடந்தது. இதை தரிசிக்க திருமலையில் 7 லட்சம் பக்தர்கள் குவிந்தனர். ஸ்வாமி திருவுலாவுக்கு முன்னரே பக்தர்கள் கோவிலைய சுற்றி குழுமி இருந்தனர்.
கருட வாகனத்தில் மலையப்பர் அருள்பாலித்தார். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று திருநாமம் கூறி தரிசனம் செய்தனர். பெருமபாலும் அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இதில் 50 சதவீதம் பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தரிசனத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 9 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 4 பேரின் நிலை கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொழி புரியாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் பக்தர்களுக்கும் பல இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது.
கடந்த 5 நாட்களில் மட்டும் திருமலை கோவிலில் ஸ்ரீவாரி உண்டியலில் ரூ.8 கோடியும், தங்கம், வெள்ளி காணிக்கை மூலம் ரூ.2 கோடியும் மொத்தம் ரூ.10 கோடி வசூலாகியுள்ளது.












Click it and Unblock the Notifications