பிரதமர் பதவிக்கு மாயாவதி தகுதியானவர்: உமாபாரதி
டெல்லி: அத்வானியை விட உத்தர பிரதேச முதல்வர் மாயாவதிதான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று பாரதிய ஜன சக்தி கட்சியின் தலைவர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக தனது பிரதமர் வேட்பாளராக அத்வானியை அறிவித்துள்ளது. காங்கிரஸ் மன்மோகன் சிங்கே மீண்டும் பிரதமர் ஆவார் என்று கூறுகிறது. இடதுசாரிகள் மாயாவதியை முன்னிருத்த உள்ளன.
இந்நிலையில் உமாபாரதி மாயாவதிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாஜக தலைவர் அத்வானியை விட பிரதமர் பதவிக்கு மாயாவதிதான் தகுதியானவர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரதமராக வருவதை வரவேற்பேன். மகிழ்ச்சி அடைவேன்.
ஆனால் அது மிகுந்த கஷ்டம். பிரதமர் பதவிக்கு வரவேண்டும் எனறால் மாயாவதி கட்சிக்கு குறைந்தது 70 எம்பிக்களாவது தேவை.
மத்திய பிரதேசத்தில் எனது கட்சியான பாரதிய ஜன சக்தியும் பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து காங்கிரஸின் வாக்குகளை சிதைத்துள்ளன. சில பகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியும் சில பகுதிகளின் பாரதிய ஜன சக்தி கட்சியும் வலுவாக உள்ளன.
உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியை பிடித்த போதிலும், இதே அளவுக்கு வலுவான கட்சியாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் இருக்க முடியாது.
உ.பி.யில் அதிகரித்த வன்முறை காரணமான சமாஜ்வாதி மற்றும் பாஜகவுக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். மத்திய பிரதேசத்தில் ஊழல் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. இதில் மாயாவதி ஒன்றும் விதிவிலக்கல்ல.
மீண்டும் பாஜகவுக்கு திரும்பும் உத்தேசம் இல்லை. முஸ்லீம்களுக்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சியுடன் உடன்பாடு செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை.
குறுகிய கால அரசியல் ஆதாயத்துக்காக ஒருபோதும் நாட்டை அடகு வைக்க மாட்டேன். இந்த கொள்கையை என்னிடம் இருந்து அத்வானி அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரே கருத்துள்ள இரண்டு கட்சிகள் சேர்ந்தால் அது காங்கிரஸூக்கு இழப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications