புகைக்கு தடை: பீடி தொழிலாளர்களுக்கு நிவாரணம் - சரத்
சென்னை: பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமீபத்தில், மத்திய அரசு பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதித்து சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கதே.
வெளிநாடுகளிலும், பொதுநலன் கருதி இத்தகைய சட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இத்தகைய சட்டங்கள் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தும்போது இந்த சட்டத்தின் சாதகங்களை ஆராய வேண்டும். அதேவேளை, அதனால் ஏற்படும் பாதகங்களுக்கும் தீர்வு கண்ட பின்னரே அந்த சட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதேபோல் நம்நாட்டிலும் அரசு இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பே, இந்த சட்டத்தால் ஏற்படும் பாதகங்களுக்கு தீர்வு ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும்.
நம் நாட்டில், பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதித்து சட்டம் கொண்டு வரப்பட்டு புகைபிடிப்போரின் எண்ணிக்கை குறைவதால், ஏழைகளின் சிகரெட் எனப்படும் பீடி உற்பத்தியை நம்பி லட்சக்கணக்கான பீடி சுற்றும் தொழிலாளர்கள் அவர்களுள் பெரும்பாலோர் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற உண்மை தெரியவரும்.
நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் மட்டும் சுமார் 7 லட்சம் பேர் இந்த சட்டத்தால் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. ஏற்கெனவே பீடி உற்பத்தித் தொழில் நலிவடைந்து பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையில், இந்த சட்டம் மேலும் அவர்களுக்கு பாதிப்பை உருவக்கியுள்ளது.
எனவே இந்த சட்டத்தின் மூலம் பாதிப்படைந்துள்ள பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு உடனடியாக மாற்று ஏற்பாடாக, பீடி சுற்றும் தொழிலாளர்களாக பதிவு செய்திருப்பவர்களுக்கு மாற்றுத் தொழில் கிடைக்கச் செய்ய வேண்டும். மேலும், அதுவரைக்கும் அவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக அவர்களது வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில், உதவித்தொகை வழங்கவும் அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.