லஞ்சம்: பிடிபட்ட இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயற்சி
நெல்லை: வாகன சோதனையின்போது லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோர் பிடிபட்டனர். அவர்கள் லஞ்சம் வாங்குவதை வயர்வெஸ் மூலம் நெல்லை மாநகர் போலீஸார் அனைவரு கேட்கும் வகையில் டிஐஜி தெரிவித்தார். இதனால் அவமானமடைந்த இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாளையங்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினவேல், ஏட்டு இசக்கி உள்ளிட்ட போலீஸார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருட்டு மணல் லோடு லாரி டிரைவர், லைசன்ஸ் இல்லாத பைக் உரிமையாளர் ஆகியோரிடம் போலீஸார் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது.
அப்போது அந்த சாலையில் டிஐஜி கண்ணப்பன் காரில் வந்தார். இதை கவனிக்காத இன்ஸ்பெக்டர் ரத்தினவேல், ஏட்டு இசக்கி, டிஐஜியின் காருக்கு முன்னால் இருந்த காரில் லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்தனர்.
இதை பார்த்த டிஐஜி, வயர்லெஸ் மூலம், இன்ஸ்பெக்டர் ரத்திவேல், ஏட்டு இசக்கி ஆகியோர் பணக்கஷ்டத்தில் உள்ளது போல தெரிகிறது. பாளையங்கோட்டை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி வசூல் செய்து கொண்டிருக்கின்றனர்.
நான் அவசரமாக நாகர்கோவில் செய்வதால், எனது வாகனத்திற்கு உரிய பணத்தை அவர்களிடம் வழங்க முடியவில்லை. எனது காருக்கான பணத்தை அலுவலகத்தில் வந்து வாங்கிக் கொள்ளலாம் என்றார்.
டிஐஜியின் வயர்லெஸ் பேச்சை கேட்ட நெல்லை மாவட்ட போலீஸாரும், கட்டுப்பாட்டு அறை போலீஸாரும் அதிர்ச்சி அடைந்தனர். ரத்தினவேல், ஏட்டு இசக்கி ஆகியோரும் டிஐஜியின் பேச்சையும், அவர் தங்களை கண்காணிப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கமிஷனர் மஞ்சுநாதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரிடமும் கமிஷனர் விசாரணை நடத்தினார். பின்னர் இருவரையும் நெல்லை மாநகர ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இன்ஸ்பெக்டர் ரத்தினவேல் வீடு ஆயுதப்படை வளாகத்தில்தான் உள்ளது. இந்நிலையில் அவர் விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தார். இதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை துணை கமிஷணர் கல்பனா நாயக், உதவி கமிஷனர்கள் ராஜா, ஞானசேகரன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர்.