அமைச்சர் மைதீன்கான் பேனர் மீது தார் பூசி அழிப்பு
நெல்லை: பாளையங்கோட்டையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் போடப்பட்டிருந்த அமைச்சர் மைதீன்கான் படம் மீது மர்ம நபர்கள் சிலர் தார் பூசி அழித்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தசரா விழாவையொட்டி பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயில் அருகே திமுக சார்பில் பக்தர்களை வரவேற்று டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது. பேனரின் மேல்பகுதியில் முதல்வர் கருணாநிதி, அமைச்சர் ஸ்டாலின் ஆகியோரது படங்களும் கீழ் பகுதியில் அமைச்சர் மைதீகான், எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் ஆகியோரது முழு உருவ படங்களும் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் இரவில், பேனரில் இருந்த டிபிஎம் மைதீன்கான் படத்தின் மீது தார்பூசி அழித்துள்ளனர். காலையில் இதை பார்த்த திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பேனரை அங்கிருந்து அகற்றி எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து பாளை போலீசில் புகார் செய்யப்பட்டது. பாளையில் நடந்த திக மாநாட்டில் அமைச்சர் டிபிஎம் மைதீன்கான் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications