குடிக்க பணம் தர மறுத்த தாயை கொன்ற மகன் கைது
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மது குடிக்க பணம் தராத தாயை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை அருகே உள்ள திருமயத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவர் மனைவி வெள்ளச்சி (50). இவர்களது மகன் ராமசாமி (24). ராமசாமிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ராமசாமிக்கு குடிபழக்கம் உள்ளது. இந்நிலையில் மது குடிக்க தனது மனைவியிடமும் நண்பர்களிடமும் பணம் கேட்டுள்ளார். ஆனால் எங்கும் பணம் கிடைக்கவில்லை.
இதையடுத்து, தனது தாய் வெள்ளச்சியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் பணம் இல்லை என்று வெள்ளச்சி கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமசாமி தாயை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
இதில் வெள்ளச்சி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.