தேமுதிகவுடன் கூட்டணி வைக்க ஆட்சேபனையில்லை: அன்புமணி
சென்னை: திமுக, அதிமுக தவிர்த்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைக்க விரும்புகிறோம். அந்த கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக சேருவதில் ஆட்சேபனை ஏதுமில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக அல்லாத கட்சிகளை காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைப்பதையே பாமக விரும்புகிறது. அந்தக் கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக சேருவதில் ஆட்சேபனை இல்லை. அப்படி உருவாகும் கூட்டணி வலுவுள்ளதாக இருக்கும்.
கூட்டணி என்பது தேர்தலுக்கான ஒரு உடன்பாடுதான் என்பதால் அதில் சிக்கல் இருக்காது. காங்கிரஸ், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் சேர்ந்தால் அது வலுவான கூட்டணியாக உருவாகும். வேறு சில சிறிய கட்சிகளும் அதில் சேரும்போது வெற்றிக் கூட்டணியாக அது அமையும்.
நாங்கள் காங்கிரசுடன் இருக்கிறோம், கூட்டணி விஷயத்தில் காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொருத்து எங்களது முடிவு அமையும். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் இருப்பதால் மத்திய அரசில் தொடருவதில் எந்த சிக்கலும் இல்லை.
தமிழ்நாட்டில் அரசுக்கு எதிரான உணர்வு மக்களிடையே வலுவாக உள்ளது. திமுகவுடன் உறவை துண்டித்துக் கொள்ள காங்கிரசுக்கு போதிய காரணங்கள் உள்ளன. அரசுக்கு எதிரான நிலை நிலவுவதால் திமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். மக்களை பொருத்தவரை திமுக, அதிமுக இடையே வேறுபாட்டை அவர்கள் காணவில்லை.
திமுகவுடன் மீண்டும் கூட்டணி கஷ்டம்:
காரணமில்லாமல் பாமகவை திமுக வெளியில் அனுப்பியது. அந்த கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைத்துக் கொள்வது மிகவும் கடினம்.
கூட்டணி விஷயத்தில் திமுகவுடன் சமரசம் செய்து கொள்வது மிகவும் கடினம் என்றார்.
அதிமுகவுடன் கூட்டணி பற்றிய கேள்விக்கு பதில் அளிக்காத அவர் தேமுதிகவுடன் கூட்டணி பற்றி கேள்விக்கு அரசியலில் நிரந்தர எதிரி இல்லை என்றார்.
தேமுதிகவுடன் கூட்டணி வைக்க பாமகவுக்கு ஆட்சேபனையில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பது அரசியல் அரங்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.