பிரபாகரன் உருவில் பகத்சிங்கை காண்கிறேன்: வைகோ
சென்னை: மாவீரன் பக்திசிங்கின் வீரத்தை வன்னிக்காட்டில் பார்க்கிறேன். பகத்சிங்கை பிரபாகரனின் வடிவத்தில் பார்க்கிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
பகத்சிங் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மதிமுக தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் எழுதிய கனவாகிப்போன கச்சத்தீவு நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நூலை வைகோ வெளியிட நல்லக்கண்ணு பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில், மாவீரன் பக்திசிங்கின் வீரத்தை வன்னிக்காட்டில் பார்க்கிறேன். பகத்சிங்கை தம்பி பிரபாகரனின் வடிவத்தில் பார்க்கிறேன். தமிழினத்தை மீட்க விடுதலை புலிகள் போர்க்களத்தில் நிற்கிறார்கள். அவர்களின் ஆயுத போராட்டம் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.
இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அதை வைத்து அங்குள்ள தமிழர்களை ராணுவம் கொன்று குவித்து வருகிறது. இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.
இலங்கையில் நடந்து வரும் யுத்தத்தை இந்திய அரசுதான் பின் நின்று நடத்துகிறது என்று குற்றம் சுமத்துகிறேன். இப்படி பேசுவது, தேசதுரோகம் என்றால் இந்த தேசதுரோகத்தை வைகோ தொடர்ந்து செய்வான். இலங்கை ராணுவம் தமிழர்களை கொன்று குவிப்பது மற்றும் தேசபக்தியா
இந்திய அரசு, ராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தியாவும் இலங்கையும் தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்திருப்பது இன்னும் வெளிவராத செய்தி. இந்த ஒப்பந்தம் 2013ம் ஆண்டு வரை அமலில் இருக்கப்போகிறது.
தமிழர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதை கண்டித்தும், இலங்கை தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை மத்திய அரசு தடுக்கக் கோரியும் வரும் 10ம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு திரண்டு மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார்.