தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு
மும்பை: சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள கடும் சரிவு தங்கத்தின் விலை முன் எப்போதும் இல்லாத அளவு உயரக் காரணமாகியுள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை ரூ.1,382 ரூபாய். ஒரு சவரன் விலை 11,056 ரூபாய்.
நேற்று இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக சென்செக்ஸ் மதிப்பு 11 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழிறங்க, முதலீட்டாளர்கள் அச்சத்தில் உறைந்து போனார்கள்.
இனி பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்வதே பாதுகாப்பானது என்ற எண்ணம் பரவத் தொடங்கியதையடுத்து விறுவிறுவென விலை உயர்ந்து கிராம் விலை 1408 ஆக உயர்ந்தது.
பின்னர் உலக நாடுகளின் தலைமை வங்கிகள் ரொக்க இருப்பு விகிதத்தை 0.5 சதவிகிதம் தளர்த்துவதாக அறிவித்த பிறகே சற்று இறங்கி வந்தது தங்க விலை. மாலை நிலவரப்படி 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.13820.
இன்றும் உலக பங்குச் சந்தையில் சரிவு நிலைதான் காணப்படுகிறது. தங்கம் விலை மீண்டும் ரூ.14000 –ஐத் தாண்டும் என்ற நம்பிக்கையுடன் கடையைத் திறந்துள்ளனர் நகை வியாபாரிகள்.