மதுரையில் எஸ்சிவி ஆபரேட்டர்கள் திடீர் கைது
மதுரை: மதுரையில் மு.க.அழகிரியின் ராயல் கேபிள் விஷன் நிறுவனத்தினர் கொடுத்த புகாரின் பேரில் சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தைச் ேசர்ந்த ஆபரேட்டர் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கில்டு தலைவர் பாண்டி ஆகியோரை போலீஸார் திடீரென கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மதுரையில் ஆர்.சி.வி. நிறுவனத்தினர், சன் டிவி சானல்களை மக்கள் பார்க்க விடாமல் தடுத்து வருவதாக எஸ்.சி.வி தொடர்ந்து புகார் கூறி வருகிறது. மேலும், சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள காதலில் விழுந்தேன் படத்தையும் அழகிரி தரப்பினர் திரையிட விடாமல் தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டியதாகவும் புகார் எழுந்தது.
இந்த நிலையில், நேற்று எஸ்.எஸ்.காலனி, ஆரப்பாளையம் ஆகிய பகுதிகளில் திடீரென எஸ்.சி.வி. ஆபரேட்டர்களின் கேபிள்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் சன் டிவி சானல்களை மக்கள் பார்க்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து ஆர்.சி.வியே இதற்குக் காரணம் என்று கூறி மதுரை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கில்டு சார்பில் கரிமேடு, எஸ்.எஸ்.காலனி காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டது.
ஆனால் அந்தப் புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக கில்டு தலைவர் பாண்டி மற்றும் ஆபரேட்டர் பாலகுரு ஆகியோரை போலீஸார் திடீரென கைது செய்தனர். ஆர்.சி.வி கொடுத்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பாண்டியும், பாலகுருவும் பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications