பிரதமருக்கு தந்தி அனுப்ப திருமாவளவன் வேண்டுகோள்
சென்னை: ஈழத் தமிழர்கள் மீதான ராணுவ தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விடுதலை சிறுத்தைகள் தந்திகள் அனுப்ப வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
எப்போதுமில்லாத வகையில் அப்பாவித் ஈழத் தமிழர்களை பூண்டோடு அழித்தொழிக்கும் நோக்கத்தோடு சிங்கள அரசு தனது ராணுவத்தை அணியமாக்கி வருகிறது.
இந்நிலையில் ஈழத்தமிழ் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள சிங்கள அரசுக்கு இந்திய அரசு தகுந்த அழுத்தங்களைக் கொடுத்து இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமருக்கு தந்திகள் அனுப்பும்படி முதல்வர் கருணாநிதி அறிவித்ததை விடுதலைச் சிறுத்தைகளும் வரவேற்றுப் பாராட்டுகிறது.
அத்துடன் விடுதலைச் சிறுத்தைகள் சார்பிலும் தந்திகள் அனுப்பப்படும் என்று அறிவித்திருந்தோம். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் பிரதமருக்கு தந்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
சென்னையில் வடபழனி, தந்தி அலுவலகத்தில் இருந்து கடந்த 8ம் தேதி கட்சியின் பொதுச்செயலாளர் கா.கலைக்கோட்டுதயம், பொருளாளர் முகமது யூசுப், தலைமை நிலையச் செயலாளர் பாவரசு, தேர்தல் பணிச் செயலாளர் எழுஞ்சிறுத்தை திலீபன், மாநில செய்தித் தொடர்பாளர் ஆர்வலன் உள்பட ஆயிரக்கணக்கானோர் தந்திகள் அனுப்பினர்.
இதைப்போலவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டச் செயலாளர்களின் தலைமையில் மாவட்ட, மாநில நிர்வாகிகளும் தந்திகள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications