சமாஜ்வாடி கட்சியில் இணைந்த சம்பல் கொள்ளைக்காரி!
லக்னோ: உ.பி. மாநிலம் சம்பல் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பிரபல கொள்ளைக்காரி சீமா பரிஹார், சமாஜ்வாடி கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார்.
பயங்கர கொள்ளைக்காரியான மறைந்த, பூலான் தேவியைத் தொடர்ந்து அரசியலுக்கு வரும் சம்பல் கொள்ளைக்காரி என்ற பெருமை சீமாவுக்குக் கிடைத்துள்ளது.
உ.பி. மாநிலம் ஒரையா மாவட்டத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் பங்கேற்ற கூட்டத்தில் இந்த அறிவிப்பை சீமா பரிஹார் வெளியிட்டார்.
சம்பல் பள்ளத்தாக்கின் ராணியாகத் திகழ்ந்த பூலான் தேவி மறைவுக்குப் பின்னர் அந்தப் பள்ளத்தாக்கின் பிரபல கொள்ளைக்காரியாக திகழ்ந்தவர் சீமா. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியன் நீதிக் கட்சி என்ற கட்சியின் சார்பாக மிர்ஸாபூர் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.
சீமாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில், ஊண்டட் என்ற பெயரில், கிருஷ்ண மிஸ்ரா என்பவர் ஒரு படமும் எடுத்துள்ளார்.
கொள்ளை, கொலை, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக சீமா மீது 39 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த தேர்தலில் போட்டியிட்டபோது, பூலான் தேவியைப் போலவே தானும் எம்.பி.யாக வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார் சீமா. தன்னைப் போல மனம் திருந்தி வாழ விரும்பும் கொள்ளைக்காரர்களின் நலனுக்காக பாடுபடப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
கடந்த 2000மாவது ஆண்டுடன் தனது கொள்ளைத் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைத்து போலீஸில் சரணடைந்தார் சீமா.
சீமாவின் 13வது வயதில் அவரை பிரபல தாதா லாலாராம் என்பவன் கடத்திச் சென்று கற்பழித்தான். அதன் பின்னர் கொள்ளைக் கும்பலில் ஒருவராக இடம் பெற்றார் சீமா.
பின்னர் லாலாராமையே கல்யாணம் செய்து கொண்டார் சீமா. அதன் பின்னர் நிர்பயா குர்ஜார் என்பவரையும் மணந்து கொண்டார். சீமாவுக்கு ஒரே ஒரு மகன்.
சீமாவைப் பின்பற்றி அவரது ஆதரவு கொள்ளைக்காரர்கள் நூற்றுக்கணக்கானோர் சமாஜ்வாடிக் கட்சியில் சேர காத்துள்ளனராம்.
வர வர அரசியல் கொள்ளைக்காரர்களின் கூடாரமாகவும் மாறி வருகிறது.












Click it and Unblock the Notifications