பின் லேடன் குறித்து தகவல் தெரியவில்லை: பாக்.
இஸ்லாமாபாத்: அல் கொய்தா தலைவர் பின் லேடன் எங்கே இருக்கிறார் என்பது குறித்து பாகிஸ்தான் அரசிடம் எந்தத் தகவலும் இல்லை. எங்களுக்கு லேடன் குறித்து ஏதாவது தெரிந்தால் அதை சொல்வதோடு மட்டுமல்லாமல், நாங்களே லேடனைப் பிடிக்க நடவடிக்கை எடுப்போம் என்று அந்நாட்டு செய்தித்துறை அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானையொட்டி உள்ள பாகிஸ்தான் எல்லைப் பகுதியில்தான் பின்லேடன் பதுங்கியிருக்கிறார் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான பாரக் ஓபாமாவும், ஜான் மெக்கெய்னும் சமீபத்தில் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஷெர்ரி ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில், பின்லேடன் குறித்தோ அல்லது முக்கிய தீவிரவாதிகள் யாரேனும் எங்களது பிராந்தியத்திற்குள் நடமாடுவது குறித்து நட்புப் படையினர் எங்களுக்குத் தகவல் தெரிவித்தால் நிச்சயம் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். எங்களது எல்லைக்குள் பிற நாட்டுப் படையினரை அனுமதித்து, பாகிஸ்தானின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்க அனுமதிக்க மாட்டோம்.
பின்லேடன் குறித்து எங்களிடம் எந்தத் தகவலும் இல்லை. அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியாது. ஒரு வேளை தெரிந்தால், அதுகுறித்து தெரிவிப்போம். அத்தோடு நில்லாமல், நாங்களே அவரைப் பிடிக்க முயற்சிப்போம் என்றார்.