ஸ்பெஷல் ரயில்கள் - தெற்கு ரயில்வேயின் மகா குளறுபடி
தென்காசி: தென்னக ரயில்வேயில் தொடரும் குளறுபடியால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
தென்னக ரயில்வே தற்போது விழாக்காலம் என்பதால் பல்வேறு சிறப்பு ரயில்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கி வருகிறது. செங்கோட்டை, கோவை, நாகர்கோவில், திருச்சி ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. இதில் கடும் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
12ம் தேதி ரயில் எண் 0633 என்ற சிறப்பு ரயில் சென்னை எழும்புரிலிருந்து இரவு 8.25க்கு புறப்பட்டு மறுநாள் (13 ம்தேதி) காலை 9.45க்கு செங்கோட்டையை சென்றடைகிறது. இதேபோல் ரெகுலராக இயக்கப்பட்டு வரும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்புரிலிருந்து இரவு 8.05க்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30க்கு செங்கோட்டை சென்றடைகிறது. சிறப்பு ரயிலுக்கும், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் 20 நிமிட வித்தியாசம்தான் உள்ளது.
மேலும் இந்த ரயிலை சாதாரண நாளில் இயக்குவதால் போதிய அளவு பயணிகள் கூட்டம் இருக்காது என்ற கருத்தில்தான் இந்த இந்த ரயில் இயக்கப்படுவதாகவும், ஏற்கனவே பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் சிவகாசி முதல் செங்கோட்டை வரையுள்ள ஊர்களில் வசிக்கும் சுமார் 3 லட்சம் மக்களும் பொதிகை ரயிலை மட்டும்தான் நம்பி வாழ்கின்றனர்.
இப்பகுதி மக்கள் சென்னைக்கு செல்ல வேண்டுமேனில் 1 மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்தாலும் பொதிகை ரயிலில் காத்திருப்போர் பட்டியலில் தான் உள்ளது. ஆகவே கூடுதலாக ஒரு ரயிலை இத்தடத்தில் இயக்க பொதுமக்கள், வணிகர்கள், மாணவ, மாணவிகள் வலியுறுத்தி வரும் நிலையில் ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில் ஒன்றினை மக்களுக்கு பயன்படாத வகையில் இயக்கி இத்தடம் வருமானம் இல்லாத பகுதியாக ஒதுக்கப்படும் வகையில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இன்று சென்னையிலிருந்து புறப்படும் இந்த ரயிலில் செங்கோட்டையிலிருந்து சென்னை செல்ல நேற்று இரவு வரை 120 இடங்கள் பதிவாகியுள்ளது. அதே சமயம் பொதிகை எக்ஸ்பிரசிலும் காத்திருப்போர் பட்டியலில் 80க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
மேலும் ரயில் நிலையங்களை, வருமானம் வைத்து தரம் உயர்த்தப்படுவது வழக்கம். அதன்படி விருதுநகருக்கு தெற்கே செங்கோட்டை வரையுள்ள ரயில் நிலையங்களை அதிகாரிகள் புறக்கணித்து வருவதாகவும் குற்றச்சாட்டு உருவாகியுள்ளது.
மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 2-ம் தேதி வரை காத்திருப்போர் பட்டியலில் 297 பேர் உள்ளனர். விழாக்காலங்களில் தமிழக அரசு பேருந்துகளை போல் சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் செய்யப்படும் குளறுபடிகள போல் தென்னக ரயில்வேயிலும் அதிகாரம் கொண்ட அதிகாரிகளால் சிறப்பு ரயில் குளறுபடிகள் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications