1405 கைதிகள் விடுதலைக்கு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி
அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகத்தில் 1405 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த செப்டம்பர் 15ம் தேதி இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனை எதிர்த்து ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மறுவிசாரணை நடைபெறும் அக்டோபர் 30-ஆம் தேதி வரை தமிழக அரசின் விடுதலை நடவடிக்கை செல்லும் என தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ராஜாராமன், சதீஷ், கிருஷ்ணராஜ், செந்தில்குமார் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், கடந்த ஆண்டு ஆந்திரா மாநில அரசு சுதந்திர தினத்தை முன்னிட்டு 1500 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்து உத்தரவிட்டது. இதற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதில் இறுதி தீர்ப்பு வழங்கும் வரை, தமிழகத்தில் 1405 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பி.சதாசிவம், ஜே.எம்.பாஞ்சால் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு, வழக்கு விசாரணையை அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டனர்.
இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பி.சதாசிவம், ஜே.எம்.பாஞ்சால் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கைதிகள் விடுதலை எதிர்ப்புக்கு போதுமான தகவல்கள் தரப்படவில்லை என்று கூறி வழக்கறிஞர்களின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.