மின்வெட்டு: மதுரையில் 2 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு
மதுரை: மதுரை மாவட்டத்தில் நிலவி வரும் கடும் மின்வெட்டு காரணமாக சிறு, குறு தொழிலை நம்பியிருந்த சுமார் இரண்டு லட்சம்தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் நான்கு இடங்களில் தொழிற்பேட்டைகள் உள்ளன. அவற்றில் உறங்கான்பட்டி, கப்பலூர், கோ.புதூர், சமயநல்லூர் அருகில் உள்ள நகரி பகுதிகளில் சிறு, குறுந்தொழில்களில் சுமார் 40,000 பேர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மதுரை நகரில் கார்மெண்ட்ஸ், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விசைத்தறிக் கூடங்கள், ஆட்டோ மொபைல் உதிரிப்பாகங்கள், ரப்பர் பொருட்கள், உணவு பொருட்கள் தயாரிப்பு, பதப்படுத்துதல், சிறு விசைத்தறிகள், சைக்கிள் உதிரிபாகங்கள் தயாரிப்பு போன்ற தொழில்களில் சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக இந்த தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகினர். இந்த நிலையில், ஐந்தரை மணிநேரமே மின் வெட்டு நீடிக்கும் என்று அரசு அறிவித்தும் கூடுதலாக மூன்று நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் சுமார் 2 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
உற்பத்தி சதவீதமும் 40 முதல் 50 சதவீதம் வரை தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறு தொழிலில் நாள் ஒன்றிக்கு சுமார் ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறு தொழில்களை பாதுகாக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும் என்று சிறு - குறு தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.