தி.மலை மாணவன் பலி: அரசுக்கு விஜயகாந்த் கண்டனம்-நிதியுதவி
சென்னை: திருவண்ணாமலை மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் இறந்த மாணவனின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்திருக்கிறார்.
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியம் ஆலத்தூர் கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன் மகாலிங்கம் பாம்புக்கடியினால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
அவருக்கு அங்குள்ள செவிலியர்கள் சிகிச்சை என்ற பெயரால் ஏதோ வைத்தியம் செய்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். மருத்துவரைப் பற்றி கேட்டால் அந்த டாக்டர் அம்மா தூங்கிக் கொண்டிருக்கிறார். என்றும் அவரை தொந்தரவு செய்ய முடியாது என்றும் கூறிவிட்டனர்.
பின்னர் வீட்டுக்கு சென்ற மகாலிங்கம் வாயில் நுரை தள்ளி மீண்டும் மயக்கம் அடைந்திருக்கிறார். திரும்பவும் அவரை அதே மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அப்பொழுதும், டாக்டர் அம்மாவை தொந்தரவு செய்ய முடியாது என்று சொல்லி அந்த செவிலியர்கள் அவர்களே சிகிச்சை செய்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் மகாலிங்கம் இறந்து விட்டார்.
விஷக் கடிக்கு மருந்து தராமல் என்ன வைத்தியம் பார்த்தார்கள் என்பது தெரியவில்லை. டாக்டர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுவது ஏன் என்பதும் புரியவில்லை. ஒரு அவசர சிகிச்சை பார்ப்பதற்கு கூட டாக்டர் வரவில்லை என்றால், மருத்துவமனைகள் எதற்கு?
கொஞ்சமும் பொறுப்பில்லாமல் இருந்த மருத்துவமனை அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவனின் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த கிராம மக்கள் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். வழக்கம் போல் காவல்துறை மூலம் தடியடி நடத்தி பொது மக்களை கலைத்துள்ளது அரசு.
மருத்துவமனைக்குச் சென்றால் தாங்கள் காப்பாற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் செல்கிறார்கள். ஆனால் அரசு மருத்துவமனைகள் உயிரை காப்பவை அல்ல, உயிரை எடுப்பவையாக உள்ளன.
தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டிற்கு ஒரு அப்பாவி மாணவன் பலியாகியுள்ளான். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அந்த குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் உதவித் தொகையாக வழங்குகிறேன்.
தமிழக அரசின் மருத்துவத்துறை எவ்வளவு மோசமாக செயல்படுகிறது என்பதற்கு திருவண்ணாமலை சம்பவம் ஒன்றே போதும் என்று கூறியுள்ளார்.