பங்குச் சந்தையில் இன்று: துள்ளி விளையாடிய காளை!

அமெரிக்காவில் நிலவும் பொருளாதாரப் மந்தம் காரணமாக கடந்த 8 மாதங்களில் 13 முன்னணி வங்கிகள் திவாலாகிவிட்டன அல்லது நஷ்டத்தினால் இழுத்து மூடப்பட்டன.
இதனால் அமெரிக்கப் பங்குச் சந்தை அதலபாதாளத்தில் விழுந்தது. அமெரிக்க பங்குச் சந்தையான டோவ் ஜோன்ஸ்சில் ப்ளூ சிப் எனப்படும் டாப் நிறுவனங்களின் பங்குகளின் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. அதே போல இன்னொரு பங்குச் சந்தையான நாஸ்டாக்கிலும் பங்குகளை வாங்க ஆளில்லாத நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆசிய பங்குச் சந்தைகளும் வீழ்ந்தன. குறிப்பாக இந்தியாவின் சென்செக்ஸ் முன்னெப்போதும் இல்லாத அளவு 1,000 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமை வரை இதே நிலைதான் நீடித்தது.
இந்நிலை தொடர்ந்தால் இனி எழவே முடியாத வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயமுள்ளதைப் புரிந்து கொண்ட அமெரிக்கா, தனது நாட்டின் தனியார் வங்கிகளைக் காக்க ரூ.35 லட்சம் கோடி நிதியுதவியை பொது மக்களின் கடும் எதிர்ப்புக்கிடையே கொடுத்துள்ளது.
இதே போல பிரிட்டனும் தனது நாட்டு வங்கிகளுக்கு 63 பில்லியன் பவுண்ட் அளவு நிதியுதவி வழங்கியுள்ளது.
இந்திய நிதித் துறையும், ரிசர்வ் வங்கியும் அவசர கால நடவடிக்கையாக இதுவரை ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் இந்திய வங்கிகளுக்குக் கொடுத்து, அவை சரிந்து விழாமல் நிறுத்தியுள்ளன.
இதன் விளைவு உலக அளவில் பங்குச் சந்தைகளில் நேற்றும் இன்றும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
நேற்று 800 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்பட்ட சென்செக்ஸ், இன்றும் பசுமையாகவே ஆரம்பித்தது. அவ்வப்போது ஏற்ற இறக்கம் தெரிந்தாலும் தொடர்ந்து முன்னேற்றப் பாதையிலேயே நடைபோட்டன பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள்.
இன்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 174 புள்ளிகள் உயர்ந்து 11,483 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் 27 புள்ளிகள் உயர்ந்து 3,158-ல் நிலைபெற்றது.
காளையின் முதுகில் டோவ் ஜோன்ஸ்!:
அமெரிக்காவின் டோவ் ஜோன்ஸில் இன்று மட்டுமே 936 புள்ளிகள் உயர்ந்தது. இன்று ஒரு நாளில் மட்டும் 1.2 ட்ரில்லியன் டாலர்கள் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது. இது டோவ் ஜோன்சின் வரலாற்றிலேயே நடந்திராத வர்த்தகம் ஆகும்.
குறிப்பாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனப் பங்குகள் 36 சதவீதம் அளவு அதிக விலைக்குப் போயின. 10 டாலருக்குக் கூட வாங்க ஆளில்லாமல் இருந்த வாக்கோவியா வங்கியின் பங்குகளுக்கு இன்று கடும் கிராக்கி. 13 சதவிகிதம் அதிக விலைக்குப் போனது இந்த வங்கியின் பங்குகள்.
மற்றொரு பங்குச் சந்தையான ஸ்டாண்டர்டு அன்ட் போர் 104 புள்ளிகள் உயர்வைச் சந்தித்தது.
நாஸ்டாக்கில் இன்று வர்த்தக நேர முடிவில் 194 புள்ளிகள் உயர்ந்திருந்தது.
இன்னும் சில தினங்களுக்கு இந்தப் போக்கு தொடரும் என பங்குச் சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இப்போது தள்ளாட்டத்தில் உள்ள அமெரிக்க வங்கிகளுக்கு உதவ சுவிஸ் வங்கி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் முன்னணி நிதி அமைப்புகளும் முன் வந்திருப்பதால் பங்குச் சந்தையில் தொடர்ந்து காளையின் பாய்ச்சல் இருக்கும் என நம்புகிறார்கள் முதலீட்டாளர்கள்.












Click it and Unblock the Notifications