சோனியா பொதுக் கூட்டம்-மாயாவதி தடை
லக்னெள: ரே பரேலியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பொதுக் கூட்டத்துக்கு உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி தடை விதித்துவிட்டார்.
காங்கிரஸ்-பகுஜன் சமாஜ் இடையிலான மோதல் தொடர்ந்து பெரிதாகி வருகிறது. நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மத்திய அரசைக் கவிழ்க்க இடதுசாரிகளுடன் மாயாவதி கூட்டணி அமைத்தார். அதிலிருந்து மோதல் மேலும் அதிகரித்துவிட்டது.
இந் நிலையில், சோனியாவின் மக்களவைத் தொகுதியான ரே பரேலியில் ரயில் பெட்டித் தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், இதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை கடைசி நிமிடத்தில் மாயாவதி ரத்து செய்தார்.
இதை எதிர்த்து மத்திய அரசு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அங்கு, மாயாவதி அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
இந் நிலையில் மாயாவதி அரசுக்கு எதிராக இன்று ரே பரேலியில் சோனியா காந்தியின் பொதுக் கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்தது. ஆனால், இந்தப் பொதுக் கூட்டத்தை தடுக்கும் வகையில் ரே பரேலி தொகுதி முழுவதும் 144 தடையுத்தரவை பிறப்பித்துள்ளார் மாயாவதி.
இதற்கான உத்தரவை நேற்றிரவு உத்தரப் பிரதேச அரசு பிறப்பித்தது. இதையடுத்து சோனியாவின் பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தடையுத்தரவையும் மீறி இன்று ரே பரேலியில் சுற்றுப் பயணம் செய்யவுள்ளார் சோனியா. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
சிறை செல்லத் தயார்-சோனியா:
இந் நிலையில் இன்று காலை லக்னெள வந்த சோனியா காந்தி நிருபர்களிடம் பேசுகையில், ரே பரேலி என் கர்ம பூமி. இது இந்திரா குடும்பத்து இதயம். அதில் நுழைய எனக்கு யாரும் தடை விதிக்க முடியாது. நான் அங்கு கட்டாயம் செல்வேன். வேண்டுமானால், முடிந்தால் என்னை கைது செய்யலாம். ரே பரேலி மக்களுக்காக சிறை செல்லவும் நான் தயார் என்றார்.
ம.பி. அரசும் தடை:
இந் நிலையில் வரும் 19ம் தேதி போபாலில் நடக்கவிருந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தி பேச இருந்தார். ஆனால், அந்தக் கூட்டத்துக்கு மத்தியப் பிரதேச பாஜக அரசு தடை விதித்துள்ளது.