இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களைக் காக்க ரூ.20,000 கோடி
மும்பை: இந்திய வங்கித் துறையில் ரொக்கப் புழக்கத்தை மேலும் சகஜமாக்கவும் பரஸ்பர நிதி நிறுவனங்களின் நெருக்கடியைத் தளர்த்தவும் ரூ.20,000 கோடியை வழங்குகிறது ரிசர்வ் வங்கி.
இதுகுறித்த தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி.
தங்களிடம் உள்ள பிணையச் சொத்துகளை மீண்டும் ரொக்கமாக்குவதில் ஏற்படுகிற சவால்தான் இன்றைக்கு பரஸ்பர நிதி நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் முக்கியமானது.
இன்றைக்கு பிணையமாக உள்ள சொத்துக்களின் நிகர மதிப்பு, முன்பு அவற்றின் மீது வழங்கப்பட்ட கடன்களை விட குறைவாக மாறி வருகிறது (இதானே அமெரிக்க வங்கிகளின் பிரச்சினையும்!). அதே நேரம் ரொக்கத் தேவையை பூர்த்தி செய்வதற்காக, இருக்கும் சொத்துக்களை வந்த விலைக்கு விற்க வேண்டிய நிர்ப்பந்தம். இதுவே பெரும் நெருக்கடிக்கு அந்த நிதி நிறுவனங்களை இட்டுச் செல்கிறது. கையில் போதிய ரொக்கப் புழக்கம் இருந்தால், அவசரப்பட்டு சொத்துக்களை நிர்பந்தம் இருக்காது.
இந்தியாவில் உள்ள பரஸ்பர நிதி நிறுவனங்கள் மற்றும் பரஸ்பர நிதியைக் கையாளும் வணிக வங்கிகளின் பிரச்சினையும் இதுதான். இதைத் தீர்க்கத்தான் இந்த குறுகிய கால நிதி உதவியை வழங்கியுள்ளது ரிசர்வ் வங்கி.
இந்த அறிவிப்பைப் பெரிதும் வரவேற்றுள்ளார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். யுடிஐ பரஸ்பர நிதியின் தலைமை விற்பனை அதிகாரி ஜெய்தீப் பட்டாச்சார்யாவும் இந்த அறிவிப்பு குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில்தான் ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைத்திருக்க வேண்டிய ரொக்க இருப்பு விகிதத்தை 1.5 சதவிகிதம் வரைக் குறைத்து சந்தையில் கூடுதலாக ரூ.60,000 கோடி வரை பணப்புழக்கம் அதிகரிக்க வகை செய்த்து ரிசர்வ் வங்கி என்பது நினைவுகூறத்தக்கது.