For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மழை..மழை: மின்வெட்டு கொஞ்சம் குறைகிறது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மின்வெட்டு கொஞ்சம் குறைந்து வருகிறது.

சென்னை, ராமநாதபுரம், ஈரோடு ஆகிய பகுதிகளில் நேற்று முழுமையாக மின் வினியோகம் இருந்தது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 8,400 மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால் மழையில்லாமல் அணைகள் வற்றியது, காற்றில்லாமல் காற்றாலை மின் நிலையங்களில் உற்பத்தி குறைந்தது, எரிபொருள் இல்லாமல் அணு மின் நிலையங்கள் முடங்கியது, அதே நேரத்தில் ஏராளமான புதிய தொழிற்சாலைகள் அமைந்தால் மின் தேவை மேலும் அதிகரித்தது ஆகிய காரணங்களால் தமிழகத்தில் பெரும் மின்தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் தமிழ்நாடு முழுவதும் கட்டாய மின்வெட்டை மின் வாரியம் அமல்படுத்தி வருகிறது.

தினமும் ஒன்றரை மணி நேரம் என ஆரம்பித்த மின்வெட்டு 8 மணி நேரமாகிவிட்டது.

பகலில் 4 மணி நேரமும், இரவில் 4 மணி நேரம் என மி்ன்வெட்டால் தமிழகமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில் மின்சாரமும் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கிராமங்களில் நிலைமை இன்னும் மோசம். மின்வெட்டால் நீர் இறைக்கும் பம்புகள் நின்றுபோய் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் மாநிலம் முழுவதும் கடந்த நான்கு தினங்களாக ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து மின் உற்பத்தி அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி முடிந்து விட்டதால் பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்ட மின்சாரம் குறைந்துள்ளது.

மேலும் தொடர் மழை காரணமாக நகர்ப் புறங்களில் ஏ.சி. பயன்படுத்துவது குறைந்துள்ளதாம். இதுபோன்ற காரணங்களால் தமிழ்நாடு முழுவதும் சுமார் 700 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகி வருகிறது.

இந்த மின்சாரத்தை வீடுகளுக்கு திருப்பி விட்டு வருகிறது மின் வாரியம். இதனால் தமிழ்நாடு முழுவதும் மின் வெட்டு நேற்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மின் தடை ஏற்படவில்லை.

ஆனால், இன்று சென்னையில் மீண்டும் மின் தடை ஏற்பட்டது.

கிராமங்களிலும் மின்வெட்டு நான்கரை மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. பகலில் மட்டும் மின்வெட்டு இருந்தது. நேற்று முதல் அது 2 மணி நேரமாக குறைந்துள்ளது.

மதுரை நகரில் நேற்று பகல் நேர மின்வெட்டு மட்டுமே இருந்தது. மாலை மற்றும் இரவு நேர மின்வெட்டு தளர்த்தப்பட்டது. இதனால் நேற்று 3 மணி நேரம் மின்வெட்டு மட்டுமே இருந்தது. இது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

கோவை நகரில் ஆறரை மணிநேர மின்வெட்டு 3 முதல் 4 மணி நேரமாகவும், புறநகரில் நான்கரை மணி நேரமாகவும் மின்வெட்டு இருந்தது.

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 6 மணி நேரமாக இருந்த மின் வெட்டு 2 மணி நேரமாக தளர்த்தப்பட்டுள்ளது.

ஈரோட்டில் நேற்று முழுவதும் மின்சாரம் இருந்தது. மாவட்டத்தில் கோபி, சத்தியமங்கலம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் 3 மணி முதல் 4 மணி நேரம் வரை மின் தடை குறைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 6 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. ஆனால் நேற்றும், இன்றும் 5 மணி நேரமாக குறைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 6 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. நேற்று முதல் மின்வெட்டு 2 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

நெல்லை-தூத்துக்குடி மாவட்ட கிராமப்பகுதிகளுக்கு மின்வெட்டு நேரம் அதிகபட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இன்று இந்த மின் வெட்டு நேரம் மேலும் குறைக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் நகர் பகுதியில் சி.எம்.சி. மருத்துவமனைக்காகமட்டும் மின் தடையில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆற்காடு சாலை பகுதியில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது.

இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மச்சேந்திரநாதன் கூறியதாவது:

கடந்த 2 நாட்களாக பரவலாக பெய்த மழையால் மின் தேவை குறைந்துள்ளது. குறிப்பாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மோட்டார்கள் பயன்பாடு குறைந்தது. இதனால் நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்தடை செய்யப்படவில்லை. இன்று முதல் கிராமப்புறங்களில் ஆறரை மணி நேரமாக இருந்த மின் வெட்டு 2 மணி நேரம் குறைக்கப்படுகிறது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X