நர்ஸ் கொலை-கொள்ளை: கொலையாளியின் உறவினர்கள் சிக்கினர்
நெல்லை: நகைக்காக நர்ஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளின் உறவினர்கள் 3 பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கேட்வாசல் தெருவை சேர்ந்த செல்லசாமி மனைவி தமிழ்ச்செல்வி. இவர் மணிமுத்தாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸாக பணியாற்றினார்.
இந்நிலையில் கடந்த மாதம் 31ம் தேதி வீட்டு மாடியில் தமிழ்ச்செல்வி கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொள்ளையர்கள், இவரது வாயினுள் டவலை திணித்து நைலான் கயிற்றால் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு பீரோவிலிருந்த 20 பவுன் நகைகளை கொள்ளையடித்தது சென்றனர்.
இதுகுறித்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் நாகர்கோவிலை சேர்ந்த வசந்த், கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த மகேந்திரன், ராஜேஷ் ஆகியோர் தமிழ்செல்வியை கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
கொள்ளையடித்த நகைகளை தனது அக்காள் கணவர் மூலம் வசந்த் கன்னியாகுமரியில் விற்றதும் தெரிய வந்தது. வசந்த நாகர்கோவிலில் பதுங்கி இருப்பதாக நெல்லை தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று குமரி மாவட்டம் சென்றனர். பின்னர் மார்த்தாண்டம் தனிப்படை போலீசாரும் மார்த்தாண்டம், குழித்துறை லாட்ஜிகளில் சோதனை நடத்தினர். இதில் வசந்த்தின் உறவினர்கள் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.