காலியாக உள்ள பிற்பட்டோர் இடங்கள்-பொதுப் பட்டியலுக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: உயர் கல்வி நிறுவனங்களில் பி்ற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 27 சதவீத இடங்களில் காலியாக உள்ள இடங்களை பொதுப் பட்டியலைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேணுகோபால், அதிக அளவிலான பிற்படுத்தப்பட்டவர்கள் பயன் பெறும் வகையி்ல் கிரீமி லேயர் உச்ச வரம்பை மத்திய அரசு உயர்த்தியது குறித்து நீதிபதிகளிடம் முறையிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு:
உயர் கல்வி நிறுவனங்களில் வரும் 31ம் தேதிக்குப் பிறகு எந்தவொரு இடமும் காலியாக இருக்கக் கூடாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடங்களை நிரப்புவதற்கு போதிய மாணவர்கள் இல்லாவிட்டால் அவற்றை பொதுப் பட்டியலுக்கு மாற்றி வேறு மாணவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.
காலியாக உள்ள இடங்களை அடுத்த ஆண்டு நிரப்பிக் கொள்ளலாம் என்று கேரி ஓவர் செய்யக் கூடாது. அதை இந்த ஆண்டே நிரப்ப வேண்டும்.
மேலும் பொதுப் பட்டியலைச் சேர்ந்த மாணவர்களுக்கு உள்ளதை விட கட்-ஆப் மார்க்கை 10 சதவீதத்துக்கு மேல் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு குறைக்கக் கூடாது.
கிரீமி லேயர் உச்ச வரம்பை மத்திய அரசு அதிகரித்திருப்பது குறித்து மனுதாரர்களின் வழக்கறிஞர் முறைப்படி இன்னொரு மனு தாக்கல் செய்யலாம். அதை நீதிமன்றம் ஆய்வு செய்யும் என்றனர்.