கன்னியாஸ்திரி பலாத்காரம்: கைதிகள் ஒரிஸ்ஸா பயணம்
கோவை: ஒரிஸ்ஸா மாநிலத்தில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை பலத்த பாதுகாப்புடன் போலீசார் கோவையிலிருந்து விமானம் மூலம் ஒரிஸ்ஸா கொண்டு சென்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரிஸ்ஸா மாநிலத்தில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் லட்சுமணானந்தா நக்ஸலைட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் மதக் கலவரம் வெடித்தது.
தேவாலயங்கள் மற்றும் கிருஸ்தவ நிறுவனங்கள் மீது விஎச்பி, பஜ்ரங் தள் ஆகியவற்றைத் சேர்ந்தவர்கள் கடும் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் கொல்லப்பட்டனர்.
அப்போது கந்தமால் மாவட்டம் நவுசான் கிராமத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக பாலக்காடு அருகே உள்ள கிழக்கஞ்சேரியில் ரைஸ் மில்லில் வேலை செய்த மிதுபட்நாயக் (25) சரோஜ் கடேய் (42) முன்னா கடேய் (22) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளத்தில் பணியாற்றி வரும் இந்த மூவரும் சம்பவம் நடந்தபோது ஒரிஸ்ஸாவில் இருந்தனர். மதக் கலவரத்தை பயன்படுத்தி கற்பழிப்பில் ஈடுபட்டுவிட்டு தப்பி கேரளாவுக்கு வந்துவிட்டனர்.
நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின் கேரளத்தில் வைத்து இவர்க் கைது செய்யப்பட்டனர். இந்த மூவரும் பாலக்காடு மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்பு அங்கிருந்து விமானம் மூலம் ஒரிஸ்ஸா கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த கைதிகளை கோவை விமான நிலையத்துக்கு போலீஸார் அழைத்து வந்தனர். ஆனால் கைது செய்யப்பட்டதற்கான வாரண்ட் இல்லாததால் விமானத்தில் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து மூவரும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் உரிய வாரண்ட் பெறப்பட்டது.
இதைத் தொடர்ந்து மூன்று பேரும் முகத்தை மூடியபடி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அங்கிருந்து பெங்களூர் வழியாக ஒரிஸ்ஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.